ஓவியர் வேதா
ஆலயங்களில் பொதுவாக பிட்சாடனர் சிலைகள் நான்கு கரங்களுடனேயே காணப்படும். கோவை திருப்பேரூர் ஆலயத்தில் ஆயுதங்கள் தாங்கி எட்டுத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் பிட்சாடனர். நல்ல உடற்கட்டுடன் ஒய்யார நடையில் பிச்சாடனரை சிற்பி உறைய வைத்துள்ளார்.
ரிஷிபத்தினியரை மயக்கிய உருவம் அல்லவோ! ஆபரணங்களும் காதில் அணிந்துள்ள மகர குண்டலங்களும் அசைவது போல மாயையைத் தோற்றுவிக்கின்றன. அரவமே ஆடையாக அமைக்கப்பட்டுள்ளது அருமை.
ஜடாமுடியில் கங்கையும் கபாலமும் சூரிய சந்திரரும் இருப்பது தனிச்சிறப்பு. மான்குட்டி பிட்சாடனருக்குப் பின்னர் துள்ளி வருகிறது. கூடையுடன் குண்டோதரன் காட்சியளிக்கிறார். பட்சணங்கள் தனித்தனியாகத் தெரிகின்றன.