ஆனந்த ஜோதி

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: விருச்சிக ராசி வாசகர்களே

செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.

சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவர்களே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்குச் சொல்லமுடியாத மன உளைச்சலையும், பதற்றத்தையும் தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்த குருபகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு தனவீடான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனத்திலிருந்த போராட்டம் நீங்கும். வீட்டில் பேச ஆரம்பித்தாலே பிரச்சினைகள் வெடித்ததே! இனி இதமாகப் பேசி சாதித்துக் காட்டுவீர்கள். எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதியுண்டாகும்.

சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் மனைவி இனி ஒன்று சேருவீர்கள். குரு பகவான் உங்களது ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். வீண் வதந்திகள், விமர்சனங்களிலிருந்து மீள்வீர்கள். போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் வருமோ, வராதோ என்றிருந்த பணமெல்லாம் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டாகும். வெகு நாளாகத் திட்டமிட்ட வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். குருபகவான் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். புது வேலை கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நாடாள்பவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். சங்கம், அறக்கட்டளை போன்றவற்றிலிருந்து கௌரவப் பதவிகள் தேடி வரும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான், மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் வரும். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களைச் சந்திப்பீர்கள். வீண்பழி, விபத்து, இழப்பு, உடல் நலக்குறைகள் வந்து போகும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழமை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனைவி வழியில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். அவ்வப்போது மனைவியின் ஆரோக்கியமும் பாதிக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசாங்க காரியங்கள் உடனே முடியும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் வேலைச் சுமையும் இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் அமர்வதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது.

07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகளும், அலைச்சலும் இருக்கும். ஆனாலும் தடைப்பட்ட காரியங்கள் முடியும். எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். அடிவயிற்றில் வலி, வேனல் கட்டி, தேமல் வந்து போகும்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் சமயோஜிதப் புத்தியால் சாதிப்பீர்கள். மனைவிக்கு புது வேலைக் கிடைக்கும். அவரின் ஆதரவு பெருகும். மனைவிவழிச் சொத்துகளும் கைக்கு வரும். வியாபாரத்தில் சந்தை நிலவரமறிந்து புதிதாக முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் இனி கையெழுத்தாகும். இந்த குரு மாற்றம் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் கௌரவத்தையும், பணத்தையும் அள்ளித்தரும்.

பரிகாரம்

விருதுநகர் மாவட்டம், வீரக்குடியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீகரைமேல் முருகையன்னாரை கிருத்திகை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். கேழ்வரகு தானம் கொடுங்கள். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT