ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
29.10.2019 முதல் 13.11.2020 வரை
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.
கும்ப ராசி வாசகர்களே
குலப்பெருமையை காப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் முழுவதுமாகச் செய்ய விடாமல் முடக்கி வைத்ததுடன், வீண்பழி, அவமானங்களையும் தந்த குருபகவான் இப்போது 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் தொட்ட காரியமெல்லாம் துளிர்க்கும். சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள்.
பழைய கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு வருமானம் உயரும். பங்கு வர்த்தகத்தால் பணம் வரும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலகம் ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். சகோதரிக்குத் தள்ளிபோன திருமணம் இனி சிறப்பாக முடியும். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள் வலியவந்து பேசுவார்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் புது தெம்பு பிறக்கும். சோர்வு, விரக்தி விலகும். கடினமான வேலையைக் கூட இனி எளிதாக முடிப்பீர்கள்.
எதிர்பார்த்த வகையில் பணம் வரும். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களைத் தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் விழாக்களில் முன்னுரிமை அளிக்கப்படும். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கோப தாபங்களெல்லாம் நீங்கும்.
பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். 29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த நகைகள், செல்போன், லேப்டாப், வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். தாயார் மற்றும் தாய்வழியில் பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரர்களுடன் இணக்கமாவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். புதிய வேலை அமையும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-வது வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள்.
07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்குத் தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும். 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.
சகோதரர் வகையில் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலியுங்கள். நம்பிக்கைக்குறிய வர்களிடம் கடையை விரிவுபடுத்து குறித்து ஆலோசனை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடையே கருத்துவேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். மூத்த அதிகாரியிட மிருந்து அலுவலக ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். இந்த குரு மாற்றம் மன உளைச்சல், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுவிப்பதுடன், பணப்புழக்கத்தையும், நிம்மதியையும் தந்து சமூகத்தில் தலை நிமிர வைக்கும்.
பரிகாரம்
சென்னை மாவட்டம், சாமியார்தோட்டத்தில் உள்ள ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி உடனுறை திரியம்பகேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். பச்சரிசி தானம் கொடுங்கள். பாக்கியம் பெறுவீர்கள்.