இரண்டு துறவிகள் காற்றில் கொடி அசைவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“கொடி அசைகிறது,” என்றார் ஒரு துறவி.
“இல்லை, காற்றுதான் அசை கிறது,” என்றார் மற்றொரு துறவி.
அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த ஜென் குரு ஒருவர், அவர்களிடம், “காற்றும் அசையவில்லை, கொடியும் அசையவில்லை; உங்கள் மனம்தான் அசைந்துகொண்டிருக்கிறது,” என்றார்.
வளர்ச்சி
“குருவே, நான் வளர்ந்து வருகிறேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார் மாணவர்.
“ஒரு காலத்தில், எது உன்னை அதிகமாக வருத்திப் பைத்தியமாக்கியதோ, அதுவே உன்னை இப்போது சிரிக்க வைக்கும். அப்போது நீ வளர்ந்ததைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் குரு.
எதுவும் இல்லை
“குருவே, இன்று என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டார் மாணவர்.
“எதுவும் இல்லை” என்றார் குரு.
“ஆனால், நேற்றும் நீங்கள் அதைத்தான் செய்தீர்கள்” என்றார் மாணவர்.
“ஆமாம், அதை நான் முழுமையாகச் செய்து முடிக்கவில்லை” என்றார் குரு.
- யாழினி