மத்திய அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சி.) 350 உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer-AAO) பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப் படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது. இரண்டுமே ஆன்லைன்வழியில் நடத்தப்படும்.
தேர்வுமுறை
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டத் தேர்வான முதன்மைத் தேர்வுக்குத் தகுதிபெறுவர். இதிலும் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் எல்.ஐ.சி. இணையதளத்தைப் பயன்படுத்தி (www.licindia.in) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை எல்.ஐ..சி இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். உதவி நிர்வாக அதிகாரி பணியில் சேருவோருக்குத் தொடக்க நிலையில் ரூ.56 ஆயிரத்துக்கும் மேல் ஊதியம் கிடைக்கும். அதோடு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியம், பணிக்கொடை, சிறப்புத் தேர்வு தேர்ச்சிக்குத் தனி அலவன்ஸ், எல்டிசி, குழு காப்பீடு , குழு மருத்துவக் காப்பீடு, வாகன கடனுதவி உள்ளிட்ட பல்வேறு இதர பயன்களும் கிடைக்கும்.