தேசிய அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் போட்டியான ‘சென்டா (சிஇஎன்டிஏ டிபிஓ)’, இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர் விருதுகள், பிரகாசமான சர்வதேசப் பயிற்சி வாய்ப்புகளுடன் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘தி இந்து’ ஆங்கில இதழ் வழங்கும் சிஇஎன்டிஏ டீச்சிங் புரொபஷனல்ஸ் ஒலிம்பியாட் நான்காவது தேர்வு இந்த முறை தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் உட்பட இந்தியாவில் 41 நகரங்களிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியரசிலும் நடைபெறவுள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 21 பாட வழிகளிலிருந்து (Subject track) தங்கள் பாடத்தைத் தேர்வு செய்யலாம். தொடக்கப் பாடவழியில் ( Primary Track) மொழி, கணிதம், இவிஎஸ் ஆகியவை இருக்கும். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு மொழிகளிலும் தேர்வை எழுதலாம். எஞ்சிய செகண்டரி, சீனியர் செகண்டரி ஆகியவற்றை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும்.
சிஇஎன்டிஏ டிபிஓ தேர்வு நெகட்டிவ் மதிப்பெண் இல்லாமல் இரண்டு மணி நேரம் நடத்தப்படும். பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட தேர்வு இது. சிறந்த ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் பரிசளிக்கவும் கொண்டாடுவதற்கும் சிஇஎன்டிஏவுடன் முதன்மைப் புரவலராக ரிலையன்ஸ் அறக்கட்டளையும் சேர்ந்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பின் ஓர் அங்கமாக இத்தேர்வில் வெற்றிபெறுபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணமுடிப்பு மற்றும் பட்டயத்தைச் சேர்த்துப் பெறுவார்கள்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆசிரியர் விருதுகள், தேசிய அளவில் சிறந்த ஐவருக்கு வழங்கப்படும். ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் பெறுவார்கள். பிராந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும். நகர அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தரமதிப்பீட்டில் சிறந்த 900 ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பரிசு தரப்படும். பி.எட் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் உண்டு.
ஆசிரியர் பணிக்கு ஆசைப்படுபவர்கள் உட்பட, பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள், பி.எட்., டி.எட். மாணவர்கள், கல்விப் பணியில் இருப்பவர்கள், பெற்றோர்கள்கூட இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.
தேர்வுக்கு நவம்பர் 26-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். தேர்வு டிசம்பர் 8 அன்று நடைபெறும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.centa.org