இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் நாளை நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தலைவர்களின் முகமும் புகழும் நமக்கு மிகவும் பரிச்சயம். நம் நாட்டின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் இவர்களே காரணம் என நினைக்கிறோம்.
அரசு ஊழியர்களே நாட்டின் கண்கள்
தலைவர்கள் மட்டும் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமல்ல என்பதே நிதர்சனம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அரசு ஊழியர்கள். அந்த ஊழியர்களில் முதன்மையானவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் குறைகளைக் களைவதும் தலைவர்கள் போடும் திட்டங்களைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதும் இவர்கள்தாம் என்றால், அது மிகையல்ல.
ஐ.ஏ.எஸ். கடினமானதே
நீங்கள் மலைத்தாலும் பயந்தாலும் உண்மை அதுதான். ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவது சவாலானது. Prelims, Mains, Interview என மூன்று நிலைகளைக் கொண்ட அதன் தேர்வுமுறை உங்கள் அறிவை மட்டுமல்லாமல் உங்களது பண்பையும் மன உறுதியையும் துணிவையும் போராடும் குணத்தையும் பொறுமையையும் பரிசோதிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பணம் உறிஞ்சும் பயிற்சிமையங்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் பெரியார் திடலும் கன்னிமாரா நூலகமும் மட்டுமே 90-களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கும் இடமாக இருந்தன. அங்கேயிருந்து உருவான பல அதிகாரிகள் இன்று நாடெங்கும் பல உயர் பதவிகளில் உள்ளனர். 2000-த்துக்குப் பின் பல தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமிகள் சென்னையில் உருவாயின. இன்று அவை தமிழக நகரங்களில் பரவியுள்ளன. நேரத்தையும் உழைப்பையும் மட்டுமன்றி அவை உங்கள் பணத்தையும் உறிஞ்சுகின்றன.
ஐ.ஏ.எஸ்.-க்கான இணைய வகுப்பு
இன்று இணையத்தில் பல ஆன்லைன் வகுப்புகள் இதற்கென்று உள்ளன. அதில் இலவசமாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அத்தகைய இணைய வகுப்புகளில் ஒன்றே www.clearias.com. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த பயத்தை முற்றிலும் களையும் வகையிலும் அமைந்த இதன் வகுப்புகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளன. சிவில் சர்வீஸ் தேர்வு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பருந்துப் பார்வையில் நமக்குத் தெளிவாக உணர்த்துவது இதன் சிறப்பு அம்சம்.
தேர்வு வடிவமைப்பு
உதாரணத்துக்கு ‘Prelims’ தேர்வில் இரண்டு நிலைத் தேர்வுகள் உள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 200 மதிப்பெண்கள். முதல் தேர்வில் 100 கேள்விகள் உண்டு. அந்த 100-ல், 27 கேள்விகள் இந்திய அரசியலிலிருந்தும் 20 கேள்விகள் இந்திய வரலாற்றிலிருந்தும், 20 கேள்விகள் சுற்றுச்சூழலிலிருந்தும் 12 கேள்விகள் பொது அறிவியலிலிருந்தும் 11 கேள்விகள் பொருளாதாரத்திலிருந்தும் 10 கேள்விகள் புவியியலிலிருந்தும் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இரண்டு மதிப்பெண்கள். இந்த 100 கேள்விகளையும் இரண்டு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும்’.
படிப்புக்கான திட்டமிடல்
இதற்குப் பின் ஒவ்வொரு கேள்வியும் எப்படிக் கேட்கப்படும், அதற்கு விடையளிக்க நாம் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை எளிதான முறையில் நமக்கு அது விளக்குகிறது. பின் அதற்கான இணைய வகுப்புகளைப் பற்றி நமக்குத் தெரிவித்து, மெதுவாக நம்மை அந்தப் பயிற்சிக்குள் அழைத்துச் செல்கிறது. இந்த இணைய வகுப்பின் படி, Prelims தேர்வில் முதன்முறையில் தேர்ச்சிபெற ஆறு மாதங்கள் நாம் முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். அந்த வகையில் இதன் வகுப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதல் முறையிலேயே வெல்வது எப்படி?
ஐ.ஏ.எஸ். தேர்வில் முதன் முறையிலேயே தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் சவாலானது. இந்த இலவச இணைய வகுப்பு அதை எளிதாகச் சாத்தியப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, தகவல்களையும் புத்தகங்களையும் முந்தைய கேள்வித்தாள்களையும் தேடி நூலகம் நூலகமாக இனி செல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லாமே இந்த இணைய வகுப்பில் முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
வகுப்புகள் முடிந்த பின், மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். மாதிரித் தேர்வுகளை அது நடத்துகிறது. இந்த வகுப்பின் சிறப்பே இந்தத் தேர்வுகள்தாம். இவை மாணவர்களுக்குத் தேவைப்படும் உந்துதலையும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கின்றன.
நனவாகும் கலெக்டர் கனவுகள்
கலெக்டர் ஆகும் கனவு, பள்ளிப் பருவத்தில் பலருக்கு இருந்திருக்கும். அந்தக் கனவின் மீது ஆழ்ந்த பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள் மட்டுமே, கல்லூரி படிப்புக்குப் பின் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரால் மட்டுமே தங்கள் கனவை நிறைவேற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக முடிகிறது. ஆனால், இந்த இலவச இணைய வகுப்புகள் அனைவரது ஐ.ஏ.எஸ். கனவையும் சாத்தியமாக்குகின்றன.