டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2019 ஜூலை பருவத்தில் சேருவதற்கான தேர்வு 2018 டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு சென்னையிலும் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.
இந்தத் தேர்வு இரு நிலைகளில் நடத்தப்படுகிறது. முதலில் எழுத்துத் தேர்வு. அதில் வெற்றிபெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 04.04.2019 அன்று நடைபெற இருக்கிறது.
எப்படி விண்ணப்பிக்க?
தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்வுகளின் கேள்வித் தாள் தொகுப்பு ஆகியவற்றை, The Commandant, Rashtriya Indian Military College, Dehradun, Uttarakhand, PIN 248 003 என்ற முகவரிக்கு, விரைவு அஞ்சல் வாயிலாக, எழுத்து மூலமான விண்ணப்பம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (வங்கிக் குறியீடு - 01576) என்ற வங்கிக் கிளையில் செலுத்தத்தக்க கேட்புக் காசோலை, The Commandant, R I M C, Dehradun என்னும் பெயரில் எடுக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் ரூ.600-க்கும் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் ரூ. 555-க்கும் கேட்புக் காசோலை எடுக்க வேண்டும். பட்டியலினத்தவர்கள் சாதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
தேவையான தகுதி
விண்ணப்பதாரர்கள் 02.07.2006-க்கு முன்னரோ 01.01.2008-க்குப் பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. வயது வரம்பில் தளர்வு எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, 01.07.2019-ல் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ ஏழாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.09.2018 அன்று மாலை 5:45க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பிரேசர் பாலச் சாலை, வி.ஓ.சி. நகர், சென்னை – 600 003.
கூடுதல் விவரங்களுக்கு:www.rimc.gov.in அல்லது https://goo.gl/SSFCdZ