புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் ஜியா யிஃபான், ஜாங் ஷூசியான் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் வாயிலாக ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளது.
உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் இரட்டையர் பிரிவில் கடைசியாக இந்தியா 2011-ம் ஆண்டு பதக்கம் வென்றிருந்தது. அப்போது லண்டனில் நடைபெற்ற தொடரில் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3-வது இடத்தில் உள்ள சீனாவின் லியாங் வெய் கெங், வாங் சாங் ஜோடியுடன் மோதியது. இதில் சாட்விக் - ஷிராக் ஜோடி 18-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.