ஜஸ்டின் கிரீவ்ஸ்
சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர்கள் வீசி மேற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது இந்தத் தொடரின் முதல் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன.
டருபாவில் பிரையன் லாரா மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 98.5 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
வரலாற்று சாதனை படைத்த ஜஸ்டின் கிரீவ்ஸ்
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட் செய்த போது அந்த சாதனையை படைத்தார் மேற்கு இந்தியத் தீவுகளின் ஜஸ்டின் கிரீவ்ஸ். அந்த இன்னிங்ஸில் 64, 66, 68, 70, 72 ஆகிய அடுத்தடுத்த 5 தொடர் ஓவர்களில் ரன் எதுவும் கொடுக்காமல், ஒவ்வொரு ஓவரில் தலா ஒரு விக்கெட் வீதம் 5 விக்கெட் மெய்டன் ஓவர்களை அவர் வீசினார். மொத்தம் 11 ஓவர்களில் 6 மெய்டன் ஓவர்கள் வீசி, 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
இதற்கு முன்பு கடந்த 2016-ல் தென் ஆப்பிரிக்க அணிக்கு அணிக்கு எதிராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட், தொடர்ச்சியாக நான்கு விக்கெட் மெய்டன் ஓவர்களை வீசி இருந்தார். இப்போது அந்த சாதனையை ஜஸ்டின் கிரீவ்ஸ் தகர்த்துள்ளார்.
‘டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்த சாதனையை படைத்ததில் மகிழ்ச்சி’ என ஆட்டத்துக்கு பிறகு அவர் தெரிவித்தார்.
இந்த ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஆட்டத்தில் 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் ஈர்க்கும் ஜஸ்டின் கிரீவ்ஸ்
32 வயதான ஜஸ்டின் கிரீவ்ஸ், கடந்த 2024 முதல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 930 ரன்கள், 29 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.
கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 9.5 மணி நேரம் களத்தில் நின்று போராடி, வரலாறு படைத்து ஆட்டத்தை டிரா செய்து கொடுத்தார் ஜஸ்டின் கிரீவ்ஸ். அந்த ஆட்டத்தில் 388 பந்துகளை எதிர்கொண்டு 202 ரன்களை குவித்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து கவனம் ஈர்த்தார். இப்போது தனது பந்து வீச்சு திறனை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார்.