“நாங்கள் சும்மா பங்கேற்க வரவில்லை, சவால் கொடுத்து ஆடவந்துள்ளோம்” என்று இங்கிலாந்து போட்டியில் 4 ரன்களில் தோற்ற பிறகே சூளுரைத்த நேபாள் அணி அன்று டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இத்தாலியிடம் போட்டியின்றி சரணடைந்தது.
வீரம் பேசிய நேபாள் கவிழ்ந்தது, இன்று இத்தாலியக் கிரிக்கெட் தலைவர் சிமோன் காம்பினோ, “இங்கிலாந்தை சுட்டு வீழ்த்தவே கொல்கத்தா வந்துள்ளோம்” என்று இன்னொரு சூளுரை விடுத்துள்ளார்.
நேபாளுக்கு எதிராக இத்தாலி அவர்களை 123 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு விக்கெட் கொடுக்காமலேயே வென்று நேபாள் அணியின் நிலை என்ன என்பதைக் காட்டியது. அன்று வெற்றி பெற்ற போது காம்பினோ ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
இத்தாலிய கிரிக்கெட் அணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அதிகாரபூர்வ பதிவில் காம்பினோ கூறும்போது, “இந்தத் தருணத்தை நான் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. இப்போது கொல்கத்தாவுக்கு செல்கிறோம் இங்கிலாந்தை சுட்டு வீழ்த்தவே கொல்கத்தா செல்கிறோம். நாங்கள் அரையிறுதிக்குள் நுழைய ஆசைப்படுகிறோம். ” என்றார்.
தங்களது முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே வரலாற்று வெற்றி பெற்றது அவருக்கு உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவருடன் நீண்டநாள் நண்பரான இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் கபீர் பேடி இருந்தார். இத்தாலிய மொழியில் அணியினருடன் பேசி அவர்களை உற்சாகப்படுத்தியதாகவும் ஆங்கில ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
1976 ஆம் ஆண்டு வெளியான இத்தாலிய தொலைக்காட்சி தொடர் Sandokan மூலம் கபீர் பேடி இத்தாலியில் பெரும் புகழ் பெற்றார். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக போராடும் கடற்கொள்ளையன் கதாபாத்திரமான ‘மலேசியன் டைகர்’ வேடத்தில் அவர் நடித்தது அந்நாட்டு மக்களிடையே இன்னமும் நினைவில் உள்ளது. சச்சின் டெண்டுல்கரை இத்தாலியர்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் கபீர் பேடியை அறிந்திருக்கிறார்கள் என்றார் காம்பினோ.