சென்னை: உலக கோப்பை ரோல்பால் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச ரோல் பால் கூட்டமைப்பு சார்பில் 7-வது உலகக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, கென்யா, இலங்கை, சவுதி அரேபியா, ஈரான், பிரான்ஸ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த இருபாலர் அணிகளும் பங்கேற்றன.
இதில், மகளிர் பிரிவில் இந்திய அணி 3-வது முறையும், ஆடவர் பிரிவில் 5-வது முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தங்கம் வென்ற இந்திய அணியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதுமிதா, தீபக்ராஜ் மற்றும் கோவையை சேர்ந்த மகதி ஆகிய மூவர் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.
பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர் ராஜசேகர், திண்டுக்கல் சுஷ்மிதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். தமிழக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு ரோல் பால் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், தமிழ்நாடு ரோல் பால் சங்கத் தலைவர் செல்லமுத்து, செயலாளர் கோவிந்தராஜ் துணைத்தலைவர் பிரேமநாத் மற்றும் சரவணன், துணை செயலர் மணிகண்டன், சர்வதேச ரோல்பால் சங்க இயக்குனர் ஸ்டீபன் டேவிட், மதுரை மாவட்ட தலைவர் ராபின் ராஜகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.