சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகரில் நடைபெற்றது. இதன் 14-வது மற்றும் கடைசி சுற்று நேற்றுமுன்தினம் நடந்தது.
ஆடவர் பிரிவில் ஏற்கெனவே பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்த உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்த்ரோவ், சீனாவின் வெய்யியுடன் டிரா செய்தார். 14 சுற்றுகளின் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த சிந்த்ரோவ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதி பெற்றார். அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் குகேஷுடன் விளையாட இருக்கிறார்.
மகளிர் பிரிவு கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை எதிர்கொண்டார். வெள்ளைநிற காய்களுடன் ஆடிய வைஷாலி 48-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அவருடன் சவாலுக்கு நின்ற கஜகஸ்தானின் பிபிசாரா அசவுபயேவா கடைசி சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக்குடன் டிரா செய்தார்.
முடிவில் வைஷாலி 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டியில் வாகை சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 24 வயதான வைஷாலி படைத்தார். அத்துடன் ஆண்டின் இறுதியில் நடக்கும் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனா சீன வீராங்கனை ஜூ வென்ஜூனுடன் மோதும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்ற 8 வீராங்கனைகளில், மிகக்குறைந்த ரேட்டிங் கொண்ட வீராங்கனையாகவே தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆர்.வைஷாலி களமிறங்கினார். இருப்பினும், தனது அமைதியான ஆட்டத்தின் மூலம் பதில் சொன்ன அவர், ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். வைஷாலியின் சகோதரரான பிரக்ஞானந்தாவும் கேண்டிடேட்ஸ் தொடரின் போட்டியிட்டார். ஆனால் அவர், 6 புள்ளியுடன் 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பிரக்ஞானந்தாவின் வாய்ப்புகள் மங்கிய பிறகும் கூட தொடரின் ஒட்டுமொத்த கவனமும் வைஷாலியின் பக்கம் திரும்பவில்லை. தரவரிசையில் கடைசியாக இருந்தபோதும் அமைதியாகவும் அதேவேளையில் ஆழமாகவும் செயல்பட்ட வைஷாலி முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி சாதித்துள்ளார்.
இந்த முறை 8.5 புள்ளிகளுடன் அவர், கேண்டிடேட்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த ஆண்டு டொராண்டோவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாடிய வைஷாலி, 2-ம் இடத்தை பகிர்ந்து கொண்டார். அதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டிருந்தார்.
அமைதியும், அளவான பேச்சுமே நீண்டகாலமாக வைஷாலியின் பலமாக இருந்து வருகின்றன. வங்கி கிளை மேலாளராகப் பணிபுரியும் தந்தை மற்றும் இல்லத்தரசியான தாய் என ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பச் சூழலே அவரது இந்த குணாதிசயங்களைச் செதுக்கியுள்ளது. கோனேரு ஹம்பி மற்றும் டி.ஹரிகா ஆகியோருக்குப் பிறகு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற வைஷாலி, எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாகத் தனது தரவரிசையை உயர்த்தி இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார்.
வைஷாலி தனது சிறுவயது முதலே பல்வேறு வயதுப்பிரிவுப் போட்டிகளில் ஏராளமான பட்டங்களைக் குவித்துள்ளர். 2021-ம் ஆண்டு ‘சர்வதேச மாஸ்டர்’ பட்டத்தைப் பெற்ற அவர், 2022-ல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அங்கு தனிநபர் பிரிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தை வென்றதோடு, இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்லவும் முக்கியப் பங்காற்றினார்.
சைப்ரஸிலும் அதே அமைதியான தன்னம்பிக்கை அவரிடம் உறுதியாக இருந்தது. கேண்டிடேட்ஸ் தொடரில் அவர், வெற்றி பெற வாய்ப்பு குறைந்த வீராங்கனையாகவே கருதப்பட்டார். ஆனாலும் மனம் தளரவில்லை. அதிர்ஷ்டமும் திறமையும் அவர் பக்கம் இருந்தன. 2023-ல் சாதித்தது போலவே, 2025-ம் ஆண்டிலும் ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் தொடரை வென்றதன் மூலமே அவர் இந்த கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.
சைப்ரஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் நார்வே செஸ் சாம்பியன் அன்னா முசிச்சுக், உலகின் ரேபிட் சாம்பியன் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்சினா, உலக பிளிட்ஸ் சாம்பியன் மற்றும் சீனாவின் மிகச்சிறந்த வீராங்கனைகளான ஜூ ஜினர் மற்றும் முன்னாள் கேண்டிடேட்ஸ் வெற்றியாளர் டான் சோங்கி என பல ஜாம்பவான்கள் நிறைந்த ஒரு களத்தில், வெற்றி வாய்ப்பு வைஷாலிக்கு சாதகமாக இருக்கவில்லை.
மேலும் கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் திவ்யா தேஷ்முக், வைஷாலியை விட பலமான போட்டியாளராக பார்க்கப்பட்டார். ஆனால், வைஷாலி தன்னைச் சுற்றியிருந்த இத்தகைய பேச்சுகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், அமைதியாகத் தனது பாதையில் பயணித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து நிலவிய நிச்சயமற்ற சூழல் மற்றும் போர் மண்டலத்திற்கு மிக அருகாமையில் சைப்ரஸ் அமைந்திருந்த காரணத்தால், பாதுகாப்பு கருதி இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கோனேரு ஹம்பி இப்போட்டியிலிருந்து விலகினார். இருப்பினும் வைஷாலி எதற்கும் அஞ்சாமல் தனது பாதையில் உறுதியாக நின்று பயிற்சிகளைத் தொடர்ந்தார்.
2013-ம் ஆண்டு தனது சொந்த ஊரான சென்னைக்கு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வருகை தந்தபோது, ஒரு காட்சிப் போட்டியில் அவரைத் தோற்கடித்து, தனது 12 வயதிலேயே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் வைஷாலி. இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அவர், சைப்ரஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சவாலான பயணத்தை எதிர்கொண்டார்.
அவர் ஒரு டிரா, மற்றும் இரண்டு வெற்றிகளுடன் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினார். ஆனால், ஜூ ஜினெரிடம் ஏற்பட்ட ஒரு தோல்வி, அவரது முன்னேற்றத்தைச் சற்றே தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியது. இருப்பினும், இறுதிக்கு முந்தைய சுற்று வரை வெற்றியாளர் யார் என்பதில் பெரும் போட்டி நிலவியது. வைஷாலி உட்பட இரண்டு வீராங்கனைகள் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, ஜூ ஜினர் 7 புள்ளிகளுடன் அவர்களுக்கு மிக அருகாமையில் பின்தொடர்ந்து வந்தார்.
இதனால் பட்டம் வெல்லும் வாய்ப்பு இவர்கள் அனைவருக்குமே சமமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் கேத்ரினா லாக்னோவுக்கு எதிராக சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த மிகக்கடுமையான போராட்டத்தில் வைஷாலியின் அடையாளமான அமைதியும் நிதானமுமே மேலோங்கிநின்றன. அந்த ஆட்டத்தின் முடிவுதான், இறுதியில் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குச் செல்வதை உறுதி செய்துள்ளது.
வைஷாலியின் அடுத்த இலக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டி. அங்கே அவருக்கு எதிராக சதுரங்கப் பலகையின் மறுபுறம் அமர்ந்திருக்கப் போவது, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சீன வீராங்கனை ஜூ வென்ஜுன். 12 வயதிலேயே மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய அதே துணிச்சலுடன், ஜூ வென்ஜுனின் 5 ஆண்டுகால ஆதிக்கத்தை வைஷாலி முறியடிப்பார் என்று ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்கிறது.