சல்மான் அலி ஆகா
கொழும்பு: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாட உள்ளன. இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறியதாவது:
“எங்கள் 15 வீரர்களில் உஸ்மான் தாரிக்கும் ஒருவர், நாங்கள் அவரை அப்படித்தான் நடத்துகிறோம். ஊடகங்களே அவரை பெரிதுபடுத்துகின்றன. உஸ்மான் தாரிக் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக அவர், மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதற்கு முன்பு அவர், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் மிகச் சிறப்பாக பந்துவீசினார். உஸ்மான் தாரிக் எங்களுக்கு ஒரு துருப்புச் சீட்டு என்று கூறலாம்.
அவரது பந்துவீச்சு பாணி குறித்து பல்வேறு கருத்துகள் எழுகின்றன. ஆனால் அவற்றை அவர், கண்டுகொள்ளவில்லை. 2 முறை அவரது, பந்துவீச்சு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஐசிசி கூறியதையும், சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதற்கு என்ன தேவையோ அதையும் உஸ்மான் தாரிக் செய்துள்ளார்.
உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. வரலாற்றை மாற்ற முடியாது. அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். இம்முறை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம்” என்றார்.