கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா

 
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா சாம்பியன்

செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும் டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசையிலும் எலெனா ரைபகினா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் மைதானத்தில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவும், தரவரிசையில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ள கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவும் மோதினர். இதில் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் எலெனா ரைபகினா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முதல் செட்டைக் கைப்பற்றிய எலெனா ரைபகினா, இரண்டாவது செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றிக்குத் தேவையான 3-வது செட்டில் ரைபகினா சுதாரித்து விளையாடி புள்ளிகளைக் குவித்தார். 3-வது செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றிய ரைபகினா பட்டத்தை வென்றார்.

முதல் பட்டம்: இந்தப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் எலெனா ரைபகினா

முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் சாதனை புரிந்துள்ளார். இந்த அமெரிக்க ஓபன் பட்டத்தையும் சேர்த்து அவர் மொத்தம் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

தோல்வி: கடந்த 2 ஆண்டுகளில் அரினா சபலென்கா தொடர்ச்சியாக 2 முறை அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றிருந்தார். இந்த முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யலாம் என்று காத்திருந்த சபலென்காவை வீழ்த்தியுள்ளார் ரைபகினா. இதனால் அவரது அமெரிக்க ஓபன் பட்ட ஹாட்ரிக் கனவு, கலைந்துவிட்டது.

பரிசுத்தொகை ரூ52.55 கோடி

மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற எலெனா ரைபகினாவுக்கு சுமார் ரூ.52.55 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. 2-வது இடம் பிடித்த அரினா சபலென்கா சுமார் ரூ.26.75 கோடி பரிசுத்தொகையைத் தட்டிச் சென்றார்.

99 வாரங்களுக்குப் பின் தரவரிசையில் முதலிடத்தை இழந்த சபலென்கா

உலக டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசையில் கடந்த 99 வாரங்களாக முதலிடத்தில் இருந்த பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அந்த இடத்தை இழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியுறச் செய்துள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினாவிடம், பட்டத்தை இழந்தார் சபலென்கா.

இதனால் தரவரிசையிலும் அவர் முதலிடத்தை இழந்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸில் பட்டம் வென்றதன் மூலம் அதிக புள்ளிகளைப் பெற்ற ரைபகினா முதலிடத்துக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெற்றி எளிதாக வந்துவிடவில்லை’

உலக டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து முன்னேறியிருக்கிறார் ரைபகினா. வெற்றி குறித்து எலெனா ரைபகினா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த அமெரிக்க ஓபன் பட்டம் எனது வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான இடத்தில் இடம்பெற்றுவிட்டது. இந்தத் தருணத்தை நான் மிகவும் உயர்ந்த இடத்தில் வைப்பேன். கடந்த சில வாரங்களில் என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்துள்ளன. உலக டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது, தற்போது இந்த அமெரிக்க ஓபன் கோப்பையை வென்றது என அனைத்தும் இதில் அடங்கும்.

பல ஆண்டுகளாக நான் இந்தத் தொடரில் பங்கேற்று வருகிறேன். ஆனால் இதற்கு முன் ஒருமுறை கூட எனக்கு வெற்றிகரமான கிராண்ட் ஸ்லாம் தொடர் அமைந்ததில்லை. அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. இது மிகவும் அற்புதமாக விஷயமாக இருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்கு முன்னர் காயம் அடைந்து இருந்தேன். அதில் இருந்து மீண்டு போட்டியில் பங்கேற்றேன். மற்றவர்கள் பந்து வீசிப் பயிற்சி செய்வதையும், போட்டிக்குத் தயாராவதையும் நான் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருந்தது. உடல்நலத்தை மீட்டெடுப்பதற்கான பயிற்சிகளைச் செய்வதற்காகவே தினமும் சுமார் மூன்று மணி நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிட்டேன். அது எளிதான விஷயமாக இல்லை. ஆனால் நான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், இந்தச் செயல்முறையை நம்ப வேண்டும் என்பதையும் அறிந்திருந்தேன். இந்த வெற்றி எளிதாக வந்துவிடவில்லை.

இந்த கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இப்போது கோப்பையுடன் இங்கே நிற்பது, அந்த அனைத்துக் கடினமான நேரங்களையும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT