குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன்
ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சக்சஸ் வீரர் சாய் சுதர்ஷன் விந்தையிலும் விந்தையாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அது அந்த அணியை ஆட்டம் காண செய்தது.
3-வது ஓவரில் அவர் கையிலிருந்து பறந்த மட்டை தரையில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருமுறை ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரரானார் சாய் சுதர்ஷன்.
ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஆர்சிபி பவுலர் ஜேக்கப் டஃபி வீசிய பந்தை கட் செய்தார் சாய் சுதர்ஷன். பந்து பவுண்டரிக்குப் பறந்தது என்னவோ உண்மை. ஆனால் ஆர்சிபி வீரர்களோ சிரித்து மகிழ்ந்தபடி இருந்தனர். பார்த்தால் சுதர்ஷன் பெவிலியன் நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். என்னவென்று பார்த்தால் கையிலிருந்து பிடுங்கிச் சென்ற மட்டை ஸ்டம்பைத் தாக்கி ஹிட் விக்கெட் ஆனதே அதற்கு காரணம்.
ஷாட்டை முடித்தவுடன் அதே வேகத்தில் அவரது மட்டைக் கையிலிருந்து பறந்து சென்று தரையில் பட்டு, பிறகு ஸ்டம்பில் விழுந்தது. அதாவது கட் ஷாட் அடித்து ஷாட்டைப் பூர்த்தி செய்கையில் மட்டையை சுழற்றிய சுழற்றலில் அவரது வலது தோள்பட்டைப் பக்கம் வந்த மட்டை கையிலிருந்து நழுவி பறந்து சென்று தரையில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.
இது முதல் முறையல்ல, கடந்த 2022 ஐபிஎல் சீசனில் சாய் சுதர்ஷன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இதே போல் ஹிட் விக்கெட் ஆனார். அப்போது பவுலர் பொலார்ட். அவர் பவுன்சரை வீசினார். புல் ஷாட் ஆட முயன்ற சாய் சுதர்ஷனின் மட்டையில் பந்து சிக்கவில்லை. ஆனால் மட்டைப் பறந்து போய் ஸ்டம்பில் சிக்கியதுதான் நடந்தது.
ஐபிஎல் தொடரில் இதுவரை சுதர்ஷனையும் சேர்த்து 20 வீரர்கள் ஹிட் விக்கெட் ஆகியுள்ளனர். இவர் ஹிட் விக்கெட் ஆக அதன் பிறகு சரிவு கண்டது குஜராத் டைட்டன்ஸ்.
மொஹீந்தர் அமர்நாத் என்ற முன்னாள் இந்திய வீரர் விசித்திரமாக ஆட்டமிழப்பதில் வல்லவர். சென்னையில் ஒருமுறை கோவன்ஸ் என்ற இங்கிலாந்து பவுலரை ஃபைன்லெக்கில் சிக்ஸ் விளாசினார், ரசிகர்கள் பந்தைப் பார்த்துக் கொண்டிருக்க மொஹீந்தர் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார் பார்த்தால் பேலன்ஸ் இல்லாமல் ஸ்டம்ப் மேல் விழுந்து ஆட்டமிழந்தார்.
இவரே ஒருமுறை பேட்டிங்கின் போது ஹேண்டில்ட் த பால் முறையில் ஆட்டமிழந்ததும் குறிப்பிடத்தக்கது.