வதோதரா: நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 6 பந்துகளை மீதம் வைத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிக் கட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு 23 பந்துகளில், 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
விராட் கோலி (93), ரவீந்திர ஜடேஜா (4), ஸ்ரேயஸ் ஐயர் (49) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் 6-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் இணைந்து ஹர்ஷித் ராணா 37 ரன்கள் சேர்த்து அசத்தினார். முன்னதாக பந்துவீச்சில் முக்கியமான கட்டத்தில் 2 விக்கெட்களை கைப்பற்றி திருப்பு முனையையும் அவர், ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
போட்டி முடிவடைந்ததும் ஹர்ஷித் ராணா கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம் என்னை ஒரு ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புகிறது, அதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இதில் நம்பிக்கையும் அடங்கி உள்ளது. களத்தில் கே.எல்.ராகுல் உதவியாக இருந்தார். முழு கவனத்தையும் செலுத்தி ரன்கள் சேர்த்தேன்.
அணி நிர்வாகம் நான், 8-வது இடத்தில் ஆல்ரவுண்டராக பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. வலைப்பயிற்சியின் போது பேட்டிங்கிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துகிறேன். தேவைப்படும் போதெல்லாம் கீழ் வரிசையில் களமிறங்கி அணிக்காக 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதை என்னால் செய்ய முடியும் என்று அணி நிர்வாகமும் நம்புகிறது.
விராட் கோலி களத்தில் இருந்ததால் ஆட்டம் விரைவாக முடிவடையும் என்று நினைத்தேன். அவர், கடைசி வரை களத்தில் இருந்திருந்தால் 5 முதல் 6 ஓவர்களை மீதம் வைத்து ஆட்டத்தை முடித்திருப்போம். ஆனால் ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
அதை கணிக்க முடியாது. பந்துவீச்சில் தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்களை வீழ்த்தாவிட்டாலும் ரன்களை அதிகம் விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் இவை நடக்கும், நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்களை வீழ்த்தவில்லை என்றால், பிற்பகுதியில் விக்கெட்களை வீழ்த்துவோம். ஒருநாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. ஆடுகளம் மெதுவாக இருப்பதாக உணர்ந்தேன், அதிக பவுன்ஸ் கூட இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.