விளையாட்டு

“பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே திருப்ப வேண்டும்” - வருணுக்கு ஜாம்பவான் கும்ப்ளே அட்வைஸ்

ஆர்.முத்துக்குமார்

2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் நடந்த போட்டிகளில் புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி மிகவும் ஆபத்தான ஸ்பின்னராகத் தெரிந்தார். பல பேட்ஸ்மேன்களுக்கு அவரை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் நடப்பு உலகக் கோப்பை போட்டிகளில் அதே அளவிலான தாக்கத்தை அவர் இன்னும் முழுமையாக காட்டவில்லை என்று சொல்லலாம். அவர் புதிர் அவிழ்க்கப்பட்டது போல் தெரிகிறது.

இந்த தொடரில் இதுவரை 12 விக்கெட்டுகள் எடுத்து, அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஆனாலும் அவரது மேட்ச் வின்னிங் தாக்கம் இன்னும் முழுமையாக நடந்தேறவில்லை. நெதர்லாந்து, நமீபியா போன்ற அசோசியேட் அணிகளுக்கு எதிராக அவர் நன்றாக வீசினார், ஆனால் தேர்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சாத்துமுறை நடந்தது.

          

இந்நிலையில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே வருண் சக்ரவர்த்திக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதாவது, வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சில பந்துகளை வெளியே திரும்பும் வகையில் (away from the right-handers) அதிகமாக வீசினால் வருண் சக்ரவர்த்திக்கு இன்னும் நல்ல பலன் கிடைக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிரணி வீரர்கள் இவர் பந்து வீச்சை வீறத் தொடங்கும் போது அவர் கூக்ளி பந்துக்கு மட்டுமே செட்டில் ஆகிவிடுகிறார். “நான் இன்னும் அவர் வலது கை பேட்டர்களுக்கு பந்தை வெளியே திரும்பும் வகையில் வீசிப்பார்க்கவில்லை. வலது கை பேட்டர்களுக்கு பந்துகள் உள்ளே திரும்பும் வகையில் வீசுகிறார். இதற்கு பேட்டர்கள் ஓரளவுக்குத் தயாராகவே இருக்கின்றனர்.

பந்துகளை வெளியே திருப்பி ஆஃப் ஸ்பின், லெக்ஸ்பின் என்று கலவையாக வீசினால் வருண் இன்னும் அபாயகரமான பவுலராகத் திகழ்வார். என்னால் சரியான எண்ணிக்கையுடன் வருண் பலவீனத்தை நிரூபிக்க முடியவில்லை, ஆனால் பிரச்சனை இதுதான் என்று தெரிகிறது. ” என்றார் கும்ப்ளே.

இன்று இங்கிலாந்துடன் நடைபெறும் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வருண் சக்ரவர்த்திக்கு ஒரு முக்கியமான பங்கு என்பதை விட இன்றியமையாத பங்கு உள்ளது. அவருக்கு மட்டும் பந்து சரியான இடத்தில் விழத் தொடங்கினால் இங்கிலாந்தும் விழத் தொடங்கும்.

SCROLL FOR NEXT