இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
தரம்சாலா: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறவுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவிலுள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் 2-வது போட்டியில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் கோட்டை விட்டனர். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினாலும் நீண்ட நேரம் களத்தில் அவரால் நிலைக்க முடியவில்லை. அவர் 17 ரன்களில் திரும்பினார். எனவே, இன்றைய ஆட்டத்தில் அவர் பொறுப்புடன் நீண்ட இன்னிங்ஸ் விளையாடி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல் ஷுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. முதல் போட்டியில் 4 ரன்கள் எடுத்த கில், 2-வது போட்டியின் முதல் பந்திலேயே டக்-அவுட்டானார். எனவே, அவர் இன்றைய போட்டியில் உயர்மட்டத் திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
கேப்டன் சூர்யகுமார் யாதவும், தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். திலக் வர்மா 62 ரன்கள் குவித்ததால் மட்டுமே இந்திய அணி 2-வது போட்டியில் கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, சிவம் துபே ஆகியோரிடமிருந்து இன்று சிறப்பான மட்டை வீச்சு வெளிப்படும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
2-வது போட்டியில் பவுலிங்கிலும் நமது வீரர்கள் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தினர். பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சு எடுபடவில்லை. அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைட் பந்துகளை வீசி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் மட்டுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரையில் அந்த அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அபாரமாக விளையாடி வருகிறார். எனவே, அவரிடமிருந்து மேலும் ஓர் அபாரமான இன்னிங்ஸ் வெளிப்படலாம்.
எய்டன் மார்க்ரம், டெவால்ட் பிரேவிஸ், டோனவன் பெரேரா, டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோரும் தங்களது அதிரடியை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
அதேபோல பந்துவீச்சிலும் லுங்கி நிகிடி, மார்கோ யான்சன் லுத்தோ சிபம்லா, டோனவன் பெரேரா, ஓட்நீல் பார்ட்மென், ஜார்ஜ் லிண்டே ஆகியோரும் இந்திய அணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் காத்திருக்கின்றனர்.
நேரம்: இரவு 7 மணி. நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.