சஞ்சு சாம்சன்

 
விளையாட்டு

“நம்ம வழி தனி வழி” - T20 WC தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் ஹேப்பி!

வேட்டையன்

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்டம் முக்கிய போட்டிகளில் இந்தியாவுக்கு உதவியது.

31 வயதான அவர், இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 321 ரன்கள் சேர்த்தார் சஞ்சு சாம்சன். இதில் 27 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்கள் அடங்கும். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 97, இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் 89 மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 89 ரன்களை அவர் எடுத்திருந்தார். தொடர்ச்சியாக மூன்று அரை சதம் விளாசி அணிக்கு உதவினார்.

          

இந்த தொடருக்கு முன்னதாகவும், இந்த தொடரிலும் ஆடும் லெவனில் முறையாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்தார். அது அவருக்கு மனதளவில் நெருக்கடியாக அமைந்தது. டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய அவரை அணி நிர்வாகம் வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆட செய்தது. இதோடு ஆடும் லெவன் அணியில் உள்ளே… வெளியே.. என வருவதும், போவதுமாக இருந்தார். இந்த நிலையில் இருந்துதான் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை அவர் வென்றார்.

வெற்றிக்கு பிறகு சக வீரர் வாஷிங்டன் சுந்தர், “என்ன தல நாக்-அவுட் மேட்ச்னாலே 80, 90 தானா?” என கேட்க, “நம்ம வழி தனி வழி” என சஞ்சு சாம்சன் அதற்கு பதில் அளித்தார். அவர் வேடிக்கையாக இதைச் சொல்லி இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனித்த வழியை அவர் அமைத்துக் கொண்டார். அதனால் இப்போது கொண்டாடப்படுகிறார். கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

SCROLL FOR NEXT