அலிகார்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் புற்றுநோய் பாதிப்பால் இன்று (பிப்.27) காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21-ம் தேதி மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக கான்சந்த் சிங் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று காலை அவர் உயிரிழந்தார் என நொய்டாவை சேர்ந்த மருத்துவர் சுனில் குமார் தெரிவித்தார்.
தனது தந்தையின் உடல்நிலை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், அண்மையில் தந்தையின் உடல்நிலை அறிய வீடு திரும்பினார். இந்த சூழலில் மீண்டும் அணியுடன் இணைந்தார். இந்நிலையில், ரிங்கு சிங்கின் தந்தை இன்று காலமானார்.
ரிங்கு சிங்குவின் தந்தை கான்சந்த் சிங் எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டவர். அதன் மூலம் தனது குடும்பத்தை அவர் கவனித்து வந்தார் என ரிங்கு சிங்கின் பயிற்சியாளர் மசூத் அமினி தெரிவித்துள்ளார். கான்சந்த் சிங்கின் இறுதி சடங்குகள் அலிகாரில் நடைபெற உள்ளது. இதில் ரிங்கு சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்து வாடும் ரிங்கு சிங்குவுக்கு சக கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்தவர் ரிங்கு சிங். 28 வயதான அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2023 ஐபிஎல் சீசனில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் வீசி கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார். தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார்.