லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 170 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 49.5 ஓவர்களில் 402 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125, ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 8 முறை 400+ ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் கில் மற்றும் இஷான் கிஷன், இணைந்து 224 ரன்கள் சேர்த்தனர். இருவரும் ஒரே ஓவரில் சதம் விளாசினர். ஆப்கானிஸ்தான் சார்பில் பந்து வீசிய கரோட்டி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் 10 ஓவர்களில் 76 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார்.
403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் விரட்டியது. முதல் மற்றும் மூன்றாவது விக்கெட்டுக்கு 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர் ஆப்கன் பேட்ஸ்மேன்கள். அதைத்தவிர அந்த அணிக்கு வேறெதுவும் பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
ரஹமத் ஷா 79, செதிகுல்லா 42, ரஹ்மானுள்ளா குர்பாஸ் 41 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ரசூலி 6 ரன்களில் ரிட்டையர்ட் அவுட் ஆனார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி ஆட்டம் வரும் 20-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிரின்ஸ் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை ஷுப்மன் கில் வென்றார்.