கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வருகிறது. லீக் சுற்றில் 4 ஆட்டங்கள், சூப்பர் 8 சுற்றில் 3 ஆட்டங்கள் என தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது.
வலுவான டாப் ஆர்டர், நடுவரிசை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பல்வேறு மாறுபாடுகளை கொண்டிருப்பது அணியின் பலமாக உள்ளது. பேட்டிங்கில் 175.16 ஸ்டிரைக் ரேட்டுடன் 268 ரன்கள் குவித்துள்ள எய்டன் மார்க்ரம் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடியவராக உள்ளார். நடப்பு தொடரில் 3 அரை சதங்கள் விளாசி உள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 86* ஆக உள்ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.
இதேபோன்று 171.42 ஸ்டிரைக் ரேட்டுடன் 228 ரன்கள் சேர்த்துள்ள ரியான் ரிக்கெல்டன், 172 ரன்கள் எடுத்துள்ள குயிண்டன் டி காக் ஆகியோரும் டாப் ஆர்டரில் அதிரயாக விளையாடக்கூடியவர்கள். நடுவரிசையில் டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்டவர்கள். இவர்களை தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், கார்பின் போஷ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்கள்.
வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, மார்கோ யான்சன், கார்பின் போஷ் ஆகியோர் வலுவான செயல் திறனை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இதில் லுங்கி நிகிடி நடப்பு தொடரில் வேகம் குறைந்த பந்துகள், வைடு யார்க்கர்கள், வேகம் குறைந்த லெக் கட்டர்கள் என பல்வேறு மாறுபாடுகளுடன் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இதனால் நியூஸிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு லுங்கி நிகிடி சவால்தரக்கூடும். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகாராஜ், ஜார்ஜ் லின்டே ஆகியோருடன் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான எய்டன் மார்க்ரமும் பலம் சேர்க்கக்கூடும்.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது. தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானுடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்ட நிலையில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. எனினும் நிகர ரன் ரேட் காரணமாக பாகிஸ்தான் அணியை தொடரில் இருந்து வெளியேற்றி அரை இறுதி வாய்ப்பை பெற்றிருந்தது நியூஸிலாந்து அணி.
டாப் ஆர்டரில் டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் ஜோடி அதிரடி தொடக்கம் அமைத்துக் கொடுப்பவர்களாக உள்ளனர். ஆனால் நடுவரிசையில் கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. ஒரு சில ஆட்டங்களில் மிட்செல் சாண்ட்னர் பின்வரிசையில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.
இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பந்துவீச்சில் தொடக்க ஓவர்களில் மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். சுழலில் மிட்செல் சாண்ட்னர் நடப்பு தொடரில் ஓவருக்கு சராசரியாக 6.35 ரன்களையே விட்டுக்கொடுத்துள்ளார். மேலும் 9 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், கோல் மெக்கோன்சி ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் 2-வது முறையாக மோத உள்ளன. இந்த இரு அணிகளும் லீக் சுற்றில் மோதி இருந்தன. இதில் 176 ரன்கள் இலக்கை துரத்தியிருந்த தென் ஆப்பிரிக்க அணி 17 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு நியூஸிலாந்து அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க முயற்சிக்கக்கூடும்.
கடந்த 1-ம் தேதி இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 196 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியிருந்தது. பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸை வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 8-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 5 முறை மோதி உள்ளது. இதில் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க அணியே வெற்றி கண்டிருந்தது.