பல்லேகலே: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லீக் சுற்றின் கடைசி ஆட்டம் கண்டி நகரில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, கத்துக்குட்டியான ஓமனுடன் மோதியது.
முதலில் பேட் செய்த ஓமன் அணி 16.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வாசிம் அலி 33 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஜதிந்தர் சிங் 17, ஹம்மத் மிர்சா 16, கரண் சோனா வாலே 12 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். சேவியர் பார்ட்லெட், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
105 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது 13-வது அரை சதத்தை விளாசிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 33 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசினார். ஜோஷ் இங்லிஷ் 12 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக டிராவிஸ் ஹெட் 19 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.