முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசினார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அவரது ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. அதையடுத்து அவருக்கு தனது பாராட்டினை தெரிவித்தார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளரும், சிஇஓ-வுமான காவ்யா மாறன்.
நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன்களில் வெற்றி பெற்று, குவாலிஃபையர்-2 ஆட்டத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னேறியயது.
இந்த ஆட்டத்தின் போது அதிவேக சதம் விளாசும் வாய்ப்பை வைபவ் சூர்யவன்ஷி தவறவிட்டார். அப்போது களத்தில் இருந்த எதிரணி வீரர்கள் அவரது ஆட்டத்தை பாராட்டி, தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிஇஓ உரிமையாளர் காவ்யா மாறன், கைதட்டி அவரது ஆட்டத்தை பாராட்டினார்.
ஆட்டத்துக்கு பிறகு டக்-அவுட்டுக்கு வந்த காவ்யா மாறன், வைபவ் சூர்யவன்ஷி உடன் கைகுலுக்கி தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.