விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸுக்கு ஹாட்ரிக் தோல்வி: 33 ரன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி

வேட்டையன்

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்களில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த தோல்வியோடு சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக இது அமைந்தது.

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக கிளாசன் 69, இஷான் கிஷன் 55, டிராவிஸ் ஹெட் 38, அபிஷேக் சர்மா 35 ரன்கள் எடுத்தது. 236 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது.

பஞ்சாப் அணியின் பலங்களில் ஒன்று அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். இருப்பினும் இந்த ஆட்டத்தில் அவர்கள் சோபிக்கவில்லை. பிரியான்ஷ் ஆர்யா 1, பிரப்சிம்ரன் சிங் 3, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்து தடுமாறிய சூழலிலும் கூப்பர் கானோலி அபாரமாக ஆடி 59 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக ஸ்டாய்னிஸ் 28, சூர்யான்ஷ் ஷெக்டே 25, யான்சன் 19 ரன்கள் எடுத்தனர்.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதனால் 33 ரன்களில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

SCROLL FOR NEXT