விளையாட்டு

​ராகுலின் அதிரடி​ வீண்: 18.5 ஓவர்​களி​லேயே 265 ரன்கள் இலக்கை எட்டி பஞ்​சாப் அணி சாதனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐபிஎல் லீக் தொடரில் பஞ்​சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. கே.எல்​.​ராகுல் அதிரடி​யாக விளை​யாடி சதமடித்​த​போதும், பஞ்​சாப் வீரர்​கள் சிக்​ஸர்​களும், பவுண்​டரி​களு​மாக விளாசி 18.5 ஓவர்​களி​லேயே இலக்கை எட்​டினர்.

பஞ்​சாப், டெல்லி அணி​கள் மோதிய இந்த ஆட்​டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெற்றது. முதலில் விளை​யாடிய டெல்லி அணி 20 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 264 ரன்​கள் குவித்​தது.

பதும் நிசங்கா 7 பந்​துகளில் 11 ரன்​கள் எடுத்து அர்​ஷ்தீப் சிங் பந்​தில் பிரப்​சிம்​ரனிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து 2-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா​வும், கே.எல்​.​ராகுலும் பந்தை பவுண்​டரிக்​கும், சிக்​ஸருக்​கும் விளாசினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்​தது.

நிதிஷ் ராணா 44 பந்​துகளில் 11 பவுண்​டரி​கள், 4 சிக்​ஸர்​களு​டன் 91 ரன்​கள் குவித்​து, சேவியர் பார்ட்​லெட் பந்​தில் வீழ்ந்​தார். மறுமுனை​யில் அதிரடி காட்​டிய கே.எல்​.​ராகுல் 67 பந்​துகளில் 16 பவுண்​டரி, 9 சிக்​ஸர்​கள் விளாசி 152 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். டேவிட் மில்​லர் 3 பந்​துகளில் 3 ரன்​கள் எடுத்து அவுட்​டா​காமல் இருந்​தார்.

இதையடுத்து 265 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்​சாப் விளை​யாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்​கிய பிரி​யான்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே விளாசத் தொடங்​கினர். பிரியான்ஷ் 17 பந்​துகளில் 2 பவுண்​டரி, 5 சிக்​ஸர்​களு​டன் 43 ரன்கள் எடுத்​தநிலை​யில் அக்​சர் படேல் பந்​தில் வீழ்ந்​தார்.

மறு​முனை​யில் பிரப்​சிம்​ரன் அதிரடி காட்​டி​னார். அவர் 26 பந்துகளில் 9 பவுண்​டரி, 5 சிக்​ஸர்​களு​டன் 76 ரன்​களைக் குவித்து ஆட்​ட​மிழந்​தார். கூப்​பர் கானொலி 10 பந்​துகளில் 17 ரன்​களும், நேஹல் வதேரா 15 பந்​துகளில் 25 ரன்​களும் சேர்த்து வீழ்ந்​தனர்.

5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயரும், சஷாங்க் சிங்​கும் அதிரடி​யாக விளை​யாடி 18.5 ஓவர்​களி​லேயே வெற்றி இலக்கை எட்​டினர். கடின​மான இலக்​காக இருந்​த​போ​தி​லும் பிரி​யான்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் ஐயர், ஆகியோரது அதிரடி ஆட்​டத்​தால் பஞ்​சாப் அணி எளி​தாக வெற்றி இலக்கை எட்​டியது.

ஸ்ரேயஸ் 36 பந்​துகளில் 3 பவுண்​டரி, 7 சிக்​ஸர்​களு​டன் 71 ரன்​களும், சஷாங்க் 19 ரன்​களும் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

இந்த வெற்​றி​யின் மூலம் 7 ஆட்​டங்​களில் விளை​யாடி​யுள்ள பஞ்​சாப் அணி 6 வெற்​றி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என மொத்​தம் 13 புள்​ளி​களைப் பெற்று முதலிடத்​தில் உள்​ளது. இந்​தத் தொடரில் தோல்வியே காணாத அணி என்ற பெரு​மையை பஞ்சாப் பெற்றுள்​ளது.

அதே​நேரத்​தில் டெல்லி அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களைப் பெற்​றுள்​ளது. ஆட்​ட​நாயக​னாக ராகுல் தேர்வு செய்​யப்​பட்​டார்.

அதிக ரன்: டி20 போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். பஞ்சாப் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 152 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் திலக் வர்மா 151 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 148 ரன்களுடனும், ஸ்ரேயஸ் ஐயர் 147 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

4-வது இடம்: ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ராகுல் 5,579 ரன்களுடன் உள்ளார். இந்த வரிசையில் விராட் கோலி (8,989 ரன்கள்) முதலிடத்திலும், ரோஹித் சர்மா (7,183 ரன்கள்) 2-வது இடத்திலும், ஷிகர் தவண் (6,769 ரன்கள்) 3-வது இடத்திலும், டேவிட் வார்னர் (6,565 ரன்கள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

சேஸிங்கில் சாதனை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் 265 ரன்கள் என்ற இலக்கை 18.5 ஓவர்களிலேயே எட்டி பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டி சாதனை படைத்திருந்தது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளது பஞ்சாப் அணி. மேலும், ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணி சேஸிங்கில் வெற்றிகரமாக எட்டிய அதிகபட்ச ரன்கள் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், டெல்லி அணி பேட்டிங்கின்போது 2-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் - ராணா ஜோடி 220 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

4 ஆயிரம் ரன்கள்: நேற்றைய ஆட்டத்தின்போது ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்தார். அவர் தற்போது 140 போட்டிகளில் விளையாடி 4,010 ரன்களை எடுத்துள்ளார். இதேபோல் டெல்லி அணி வீரர் நிதிஷ் ராணா ஐபிஎல் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.

லுங்கி நிகிடி காயம்: டெல்​லி​யில் நடை​பெற்ற பஞ்​சாப், டெல்லி அணி​களிடையி​லான போட்​டி​யின் போது டெல்லி வீரர் லுங்கி நிகிடி காயமடைந்​தார். டெல்லி அணி ஃபீல்​டிங் செய்​து​கொண்​டிருந்​த​போது, பஞ்​சாப் வீரர் பிரி​யான்ஷ் அடித்த பந்தை பின்​புற​மாக ஓடிச் சென்று லுங்கி நிகிடி பிடிக்க முயன்​றார். ஆனால் பந்​தைப் பிடிக்​காமல் நிலை​தடு​மாறி கீழே விழுந்​தார். இதில் அவர் தலை​யில் அடிபட்​டு மயக்கமடைந்தார். இதையடுத்து மருத்​து​வர்​கள் மைதானத்​துக்கு வந்து அவரைப் பரிசோ​தித்​தனர். இதைத் தொடர்ந்து மைதானத்​துக்கு ஆம்​புலன்ஸ் வரவழைக்​கப்​பட்டு அவர் கரோல் பாக்​கிலுள்ள மேக்ஸ் மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆட்​டம் சிறிது நேரம் தடைபட்​டது. லுங்கி நிகிடிக்​குப் பதிலாக, துஷ்மந்தா சமீரா களத்​தில் ஃபீல்​டிங்​ செய்​தார்​.

SCROLL FOR NEXT