லக்னோ: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
முன்னதாக கொல்கத்தா அணியின் பேட்டிங்கின்போது 5-வது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 9 ரன்கள் எடுத்திருந்தபோது பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். பிரின்ஸ் யாதவ் வீசிய இந்த ஓவரின் கடைசி பந்தை தட்டிவிட்டு ரன்கள் சேர்க்க அங்கிரிஷ் ரகுவன்ஷி ஓட முயன்றார். பிட்ச்சின் பாதிதூரத்தை அவர் கடந்த நிலையில் மறுமுனையில் நின்ற கேமரூன் கிரீன் வேண்டாம் என மறுத்தார். இதனால் அங்கிரிஷ் ரகுவன்ஷி மீண்டும் தனது கிரீஸுக்கு திரும்புவதற்காக ஓடினார்.
அப்போது முகமது ஷமி பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசினார். அந்த பந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி மீது பட்டது. இதனால் லக்னோ அணி அப்பீல் செய்தது. இதை ஆய்வு செய்த டி.வி. நடுவர், அங்கிரிஷ் ரகுவன்ஷி பீல்டிங்கிற்கு இடையூ செய்ததாக அவுட் கொடுத்தார். இதனால் விரக்தியடைந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி மைதானத்தை விட்டு வெளியேறும்போது எல்லைக் கோட்டில் உள்ள குஷனை தனது பேட்டினால் ஆக்ரோஷமாகத் தாக்கினார்.
அதனைத் தொடர்ந்து, தனது ஹெல்மெட்டையும் வீரர்கள் அமரும் இடத்திற்கு நேராக வீசி எறிந்தார். இது ஐபிஎல் நன்னடத்தை விதி 2.2-ஐ மீறிய செயலாகும். இந்த விவகாரத்தில் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு போட்டியின் ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.