மும்பை: மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் ஜான்கு பிரதான் என்பவர் தனது மகனுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்ததால், அக்குழந்தையை குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
ஆனால், இந்த கொலைக் குற்றத்தை அக்குடும்பத்தினர் மூடி மறைத்ததோடு, நள்ளிரவில் திறந்திருந்த வாசல் வழியே ஒரு விலங்கு உள்ளே நுழைந்து குழந்தையைத் தூக்கிச் சென்றபோது அக்குழந்தை உயிரிழந்து விட்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அவசர அவசரமாக இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
ஆனால், குழந்தை மரணம் குறித்து ஆஷா பணியாளர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறை, அக்குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்தபோது நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோபிநாத் ஜான்கு பிரதான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் ஜாமீன் மனு, கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு நீதிபதி எம்.எம். நெர்லிகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாலினப் பாகுபாடு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை நீதிபதி வெளிப்படுத்தினார். “நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், நம் நாட்டில் மக்கள் இன்னும் ஆண் குழந்தையையே அதிகம் விரும்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது. குறிப்பாக, முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் மகள் பிறந்ததை விரும்பாததால், அந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் இன்னும் ஆண் குழந்தையை அதிகம் விரும்புகின்றனர் என்பதற்கான உதாரணமாகும்” என்று வேதனையுடன் நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து, இக்கொலையில் கோபிநாத் ஜான்கு பிரதானுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு, ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.