இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா
ஒஸ்லோ: நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இதன் மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடைபெற்றது. 6 வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் மொத்தம் 18 புள்ளிகளை பெற்று அவர் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வெஸ்லி 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
20 வயதான பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக நான்கு கிளாசிக் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதி சுற்று ஆட்டத்துக்கு முன்னதாக நடைபெற்ற 9 சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் வெஸ்லி சோ 15.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார். பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா 14.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தார்.
இதனால் வெஸ்லி சோ, பிரக்ஞானந்தா, அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகியோரில் யாரேனும் ஒருவர் பட்டம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. இந்நிலையில், வெஸ்லி சோ, அலிரேசா ஃபிரோஸ்ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. அதனால் அதிக புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தா பட்டம் வென்றார்.
இறுதி சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 18 புள்ளிகள், வெஸ்லி 17 புள்ளிகள், அலிரேசா ஃபிரோஸ்ஜா 15.5 புள்ளிகள், கார்ல்சன் 13 புள்ளிகள், வின்சென்ட் கீமார் 11 புள்ளிகள், டி.குகேஷ் 8 புள்ளிகள் பெற்றிருந்தனர்.