நேப்பியர்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
நேப்பியர் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக 34 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷாய் ஹோப் 69 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூஸிலாந்து அணி சார்பில் நேதன் ஸ்மித் 4, கைல் ஜேமிசன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 248 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி ஒரு கட்டத்தில் 31 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்க 208 ரன்கள் எடுத்திருந்தது. டேவன் கான்வே 84 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 90 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 46 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். வில் யங் 11, மார்க் சாப்மேன் 0, மைக்கேல் பிரேஸ்வெல் 11 ரன்களில் நடையை கட்டினர்.
18 பந்துகளில் 40 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் டாம் லேதம், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அதிரடியாக விளையாட நியூஸிலாந்து அணி 33.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் லேதம் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது போட்டி வரும் 22-ம் தேதி ஹாமில்டனில் நடைபெறுகிறது.