மிர்பூர்: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணிக்கு தொடக்கம் அதிச்சியாக இருந்தது. தொடக்க வீரர்களான மஹ்முதுல் ஹசன் ராய் 8 ரன்களில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாம் 13 ரன்களில் ஹசன் அலி பந்தில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்குடன் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து ஆட்டத்தை முன்னேடுத்துச் சென்றார். அபாரமாக விளையாடி சதம் அடித்த நஜ் முல் ஹோசைன் ஷான்டோ 130 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசிய நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹோசைன் ஷான்டோ, மொமினுல் ஹக் ஜோடி 170 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய மொமினுல் ஹக் 200 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் நோமன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய முஸ்பிகுர் ரகிம், லிட்டன் தாஸ் ஜோடி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது.
முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 85 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. முஸ்பிகுர் ரகிம் 104 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், லிட்டன் தாஸ் 35 பந்துகளில், 8 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.