வோசின்ஹா
அட்லாண்டா: என் அம்மாவால் இங்கு வர முடியவில்லை என்று கேப் வெர்டே கால்பந்து அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் கேப் வெர்டே அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்தது. ஸ்பெயினின் கோல் முயற்சியை திறம்பட தடுத்தார் கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா. இப்போது அவரது ஆட்டத்தை பார்த்து உலகமே மெர்சலாகி உள்ளது.
ஸ்பெயின் அணிக்கு களத்தில் கடும் சவால் கொடுத்த வோசின்ஹா, ஆட்டத்துக்கு பிறகு கண்கலங்கினார். அது ஏன் என்பது குறித்து பின்னர் அவரே தெரிவித்தார்.
“நான் எனது தாத்தா, பாட்டி உடன் தான் வளர்ந்தேன். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். அவர்கள் எனக்காவும், என் வாழ்க்கைக்காகவும் நிறைய செய்துள்ளார்கள். அதனால் நான் அழுதேன்.
விசா பிரச்சினை காரணமாக எனது அம்மாவால் இங்கு வர முடியவில்லை. அதோடு அவரது விசாவுக்கான கட்டணத்தை எங்களால் உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் போனது. அவர் இங்கு இருக்க வேண்டுமென நான் விரும்பினேன். கேப் வெர்டே மக்களை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்” என ஆட்டத்துக்கு பிறகு வோசின்ஹா தெரிவித்தார்.
ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் தளத்தில் 40 வயதான வோசின்ஹாவை சுமார் ஐம்பது ஆயிரம் பேர் மட்டுமே பின்தொடர்ந்தனர். இந்த ஆட்டத்தில் அவரது அபார செயல்பாட்டை கண்ட உலக மக்கள் இன்ஸ்டாவில் அவரை அதிகளவில் தொடர்ந்தனர். இப்போது அவர் சுமார் 8.4 மில்லியன் பேர் இன்ஸ்டா தளத்தில் மட்டும் பின்தொடர்கின்றனர்.