லியோனல் மெஸ்ஸி
சென்னை: கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். “உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகான இந்த காலகட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகே இதை அறிவிக்கிறேன். நான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவை உங்கள் அனைவரிடமும் அறிவிக்கிறேன்.
நிச்சயம் இந்த முடிவு எனக்கு இன்னும் வலியும், வேதனையும் தருகிறது. ஆனால், இதுதான் அதற்கான சரியான நேரமென நான் கருதுகிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் நான் கொடுத்தேன். அதை உறுதியாக சொல்வேன். அது கடந்த சில ஆண்டுகள் என்று இல்லை. அதற்கு முன்பும் கூட இப்படித்தான் எனது செயல்பாடு இருந்தது. தேசிய அணியின் ஜெர்ஸிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, கடுமையாக போராடினேன். கால்பந்து மூலம் உங்களை (அர்ஜெண்டினா மக்கள்) பெருமிதம் கொள்ளச் செய்தேன்.
எனது ஓய்வை தொடர்ந்து தகுதி வாய்ந்த இளம் வீரர்கள் நம் அணிக்காக விளையாட உள்ளனர். தேசிய அணியில் விளையாடுவதை நான் நேசித்தேன். ஆனால், இந்த அத்தியாயம் இங்கு முடிகிறது. இந்த 20 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி. இனி அணிக்கு வெளியில் இருந்து எனது ஆதரவு தொடரும்.
எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக அணி வீரர்கள் பகிர்ந்து கொண்ட தருணம் மற்றும் நினைவுகளுக்கு நன்றி. அது என்னுள் என்றும் நிறைந்திருக்கும். உங்களுக்கு கனவு போன்ற தருணங்களை சக வீரர்களுடன் அளித்துள்ளேன். மன அமைதியுடனும், பெருமையுடனும் நான் விலகுகிறேன். என்னை அர்ஜெண்டினாவை சேர்ந்தவராக படைத்த இறைவனுக்கு நன்றி” என்று மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஸ்பெயின் அணிக்கு எதிராக ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை (2026) இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பிறகே ஓய்வு முடிவை எடுத்துவிட்டதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 125 கோல்களை தனது தேசிய அணிக்காக மெஸ்ஸி பதிவு செய்துள்ளார்.