திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 43, சஞ்ஜய் யாதவ் 37, ராஜ் குமார் 35 ரன்கள் விளாசினர். மதுரை அணி தரப்பில் ராஜலிங்கம் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
174 ரன்கள் இலக்குடன் பேட் செய்து மதுரை அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிரண் கார்த்திக்கேயன் 38, சதுர்வேத் 27, பாலசந்தர் அனிருத் 23 ரன்கள் சேர்த்தனர்.
இறுதிக்கட்ட ஓவர்களில் சரவணன் 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 9 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினர்.
2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆட்ட நாயகனாக குர்ஜப்னீத் சிங் தேர்வானார்.