குவாஹாட்டி: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சிஎஸ்கே அணியில் இருந்து டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணிக்கு சென்றிருந்த ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முக்கியமான கட்டத்தில் ஒரே ஓவரில் சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
போட்டி முடிவடைந்ததும் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடிய சிஎஸ்கே போன்ற ஒரு அணியை விட்டு வெளியேறுவது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது. அது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஆனால் இது போன்ற மாற்றங்களும் பயணத்தின் ஒரு பகுதிதான் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் முதன்முதலில் ஐபிஎல் கோப்பையை வென்ற அதே அணிக்கு இப்போது திரும்பியுள்ளேன். அந்த நினைவுகள் எப்போதும் என்னுடனேயே இருக்கும். யு-19 உலகக் கோப்பைக்குப் பிறகு, எனது ஐபிஎல் வாழ்க்கையை ராஜஸ்தான் அணியில்தான் தொடங்கினேன், எனது முதல் சீசனிலேயே கோப்பையையும் வென்றேன். அந்த நினைவுகளையும் நேர்மறையான எண்ணங்களையும் சுமந்து வந்துள்ளேன்.
இந்த புதிய குழுவுடன் என்னால் முடிந்தவரை கற்றுக்கொள்வதும், எனது அனுபவத்தை அணியுடன் பகிர்ந்து கொள்வதுமே எனது லட்சியம். இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.