மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 2026-ம்ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் இந்த சீசனின் 2-வது ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியும், 3 முறை கோப்பையைவென்ற கொல்கத்தா அணியும் மோதுவதால் போட்டிசுவாரஸ்யமாக அமையும் என்று நம்பலாம். மும்பை அணி ஹர்திக்பாண்டியா தலைமையில் களமிறங்குகிறது. அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக ரியான் ரிக்கெல்டன் உள்ளார். இதைத் தொடர்ந்து களமிறங்கும் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா,ஷெர்பேன் ரூதர்போர்ட் உள்ளிட்டோர் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றனர்.
முதல் லீக் ஆட்டமாக இது அமைவதால் அந்த அணியின் முன்னிலை வீரர்கள்தங்களது உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.
அதைப் போலவே பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளிக்கக்கூடியவர்கள். இவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியவர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு உறுதுணையாக கார்பின் போஷ், ஷர்துல் தாக்குர், அஸ்வனி குமார், மயங்க் மார்க்கண்டே, ரகு சர்மா உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, கார்பின் போஷ், வில் ஜேக்ஸ்,மயங்க் ராவத், நமன் திர், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
அதேநேரத்தில் கொல்கத்தா அணியும்மும்பை அணிக்கு சவால் அளிக்கும் வகையில் பேட்டிங் வரிசையையும், பந்துவீச்சு வரிசையையும் வைத்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, ஃபின் ஆலன், டிம் ஷெய்பர்ட், ரிங்கு சிங், மணீஷ் பாண்டே, ரோவ்மன் பவல், ரமன்தீப் சிங், கேமரூன் கிரீன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் பந்துவீச்சில் வைபவ் அரோரா, சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி, ரச்சின் ரவீந்திரா, கேமரூன் கிரீன் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களைஅச்சுறுத்தக் காத்திருக்கின்றனர்.
மும்பையில் போட்டி நடைபெறுவதால் மும்பை ரசிகர்களின் ஏகோபித்த உற்சாகத்துக்கு இடையே மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. அதுபோலவே, மும்பைக்கு சவால் அளிக்கும்விதத்தில் களத்தில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த கொல்கத்தா வீரர்களும் காத்திருக்கின்றனர்.
சிஎஸ்கே போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை: சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 30-ம் தேதி காலை நடைபெறவுள்ளது. டிக்கெட் விற்பனை மார்ச் 30-ம் தேதி காலை 10.15 மணிக்கு தொடங்கும். www.chennaisuperkings.com, www.district.in ஆகிய இணையதளங்கள் மற்றும் சிஎஸ்கே செல்போன் செயலியில் டிக்கெட்களை பெறலாம்.