லாஸ்ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் நேற்று ‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் - நியூஸிலாந்து அணிகள் மோதின. தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ஈரான் அணிக்கு தொடக்கம் முதலே கடும் சவால் அளித்தது 85-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணி.
ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் வெளியில் சர்ப்ரீத் சிங்குக்கு பந்தை தட்டிவிட்டு முன்னேறினார் நியூஸிலாந்து அணியின் எலிஜா ஜஸ்ட். அதை பெற்ற சர்ப்ரீத் சிங், பாக்ஸ் பகுதிக்குள் நின்ற கிறிஸ்வுட்டுக்கு அனுப்பினார். அவர், பந்தை நெஞ்சால் கட்டுப்படுத்தி அருகில் நின்ற ஈரான் அணியின் சமன் கோடாஸ் சுதாரிப்பதற்குள் எலிஜா ஜஸ்டுக்கு தட்டிவிட்டார். எலிஜா ஜஸ்ட் வலுவாக அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
32-வது நிமிடத்தில் ஈரான் பதிலடி கொடுத்தது. வலது பக்கத்திலிருந்து மைதானத்தின் உட்பகுதியை நோக்கி நகர்ந்த ரமீன் ரெஸாயியான், கோடோஸிற்கு ஒரு பாஸ் கொடுத்தார். அதை வாங்கிய கோடோஸ் ஒரே தொடுதலில் பந்தை பெனால்டி பாக்ஸுக்குள் அனுப்பினார். அங்கே பந்தைப் பெற்ற ஷாரியர் மொகன்லு நியூஸிலாந்து டிஃபென்டர் மைக்கேல் பாக்ஸாலை ஏமாற்றித் திரும்ப முயன்றார்.
அப்போது அவர், கீழே சரிந்தபடி அடித்த ஷாட்டை, அவரை மிக நெருக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருந்த சென்டர்-பேக் வீரர் தடுத்து நிறுத்தினார். அப்போது அருகில் வேகமாக ஓடி வந்த ரெஸாயியான் கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
54-வது நிமிடத்தில் சர்ப்ரீத் சிங்கிடம் இருந்து பந்தை பெற்ற எலிஜா ஜஸ்ட் விரைவாக கடத்திச் சென்று பாக்ஸ் பகுதிக்குள் நின்ற கிறிஸ் வுட்டுக்கு தட்டிவிட்டு வலதுபுறமாக ஓடிச் சென்றார். இதன் பின்னர் கிறிஸ்வுட், எலிஜா ஜஸ்ட்டுக்கு பந்தை பாஸ் செய்ய அவர், எதிரணியின் டிஃபென்டரை கடந்து அற்புதமாக கோல் அடித்தார்.
இதனால் நியூஸிலாந்து அணி 2-1 என்றகோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 64-வது நிமிடத்தில் ஈரான் வீரர் ரெஸாயியான் அடித்த கிராஸை பெற்ற முகமது மொஹெப்பி தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற சமநிலையை எட்டியது. இறுதிக்கட்ட நிமிடங்களில் இரு அணிகளுக்கும் கோல் அணிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
எட்டாக்கனியான வெற்றி
3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் நியூஸிலாந்து அணி இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை. ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி இரு முறை முன்னிலையில் இருந்த போதிலும் 64-வது நிமிடத்தில் ஈரானின் முகமது மொஹெப்பி அடித்த கோல் காரணமாக ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் நியூஸிலாந்து அணியின் வரலாற்று வெற்றி தடைபட்டது. அந்த அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 4 டிரா, 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.