குல்தீப் யாதவ், ரிஷப் பந்த்

 
விளையாட்டு

மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பிய ரிஷப் பந்த்; லக்னோ அணியில் இணைந்த குல்தீப்

வேட்டையன்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் வீரர்களின் டிரேட் விண்டோ மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் திரும்பி உள்ளார். டெல்லி அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ், லக்னோ அணியில் இணைந்துள்ளார்.

பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2026-ம் ஆண்டுக்கான சீசன் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் நடைபெற்றது. இதில் எல்எஸ்ஜி (லக்னோ) அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்பட்டார். அந்த அணி லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்து, முதல் சுற்றோடு வெளியேறியது. மொத்தமாக 4 வெற்றிகளை மட்டுமே எல்எஸ்ஜி பதிவு செய்தது.

2026 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், எல்எஸ்ஜி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பந்த் அறிவித்தார். கடந்த 2025 சீசனை முன்னிட்டு ரூ.27 கோடிக்கு ஏலத்தின் மூலம் ரிஷப் பந்த்தை எல்எஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார்.

2025 மற்றும் 2026 என இரண்டு ஐபிஎல் சீசனிலும் மொத்தமாக 28 ஆட்டங்களில் விளையாடி 581 ரன்கள் எடுத்தார். அவர் தலைமையிலான எல்எஸ்ஜி அணி, 28 ஆட்டங்களில் விளையாடி 10-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து பந்த் விலகினார்.

28 வயதான பந்த், கடந்த 2016 சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 111 ஆட்டங்களில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், டிரேட் விண்டோ மூலம் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். தற்போது ரூ.15 கோடிக்கு அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கெனவே எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலும் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ்: ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2016 சீசன் முதல் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் விளையாடி வருகிறார். முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். இதுவரை 110 ஆட்டங்களில் விளையாடி 112 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இப்போது ரூ.13.5 கோடிக்கு டெல்லி அணியில் இருந்து விலகி, எல்எஸ்ஜி அணியில் இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT