விளையாட்டு

குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்சிபி | IPL Qualifier 1

டெக்ஸ்டர்

தரம்சாலா: ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 

தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கேப்டன் ரஜத் பட்டிதாரின் அதிரடியான பேட்டிங்கால் ஐபிஎல் பிளே-ஆஃப் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. 

பட்டிதார் வெறும் 33 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி மற்றும் குருணால் பாண்டியா தலா 43 ரன்கள் எடுக்க, ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 255 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பவர்பிளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திவேதியா 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் சுப்மன் கில் (2), சாய் சுதர்சன் (14) மற்றும் ஜோஸ் பட்லர் (29) ஏமாற்றினர்.

இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஆர்சிபி தரப்பில் ஜேகப் டஃபி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம் மற்றும் குருணால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் 5வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஆர்சிபி அணி.

SCROLL FOR NEXT