மும்பை: ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன. இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.
இந்நிலையில் 19-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி முதற்கட்ட அட்டவணை நாளை (12-ம் தேதி) வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ” ஐபிஎல் போட்டி அட்டவணையை 12-ம் தேதி அறிவிக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக ஐபிஎல் போட்டிகளின் முதல் 20 நாட்களுக்கான அட்டவணையை அறிவிக்க உள்ளோம்” என்றார்.
2026-ம் ஆண்டு சீசனுக்காக பல்வேறு அணிகள் தங்களது பயிற்சியை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நாவலூரில் உள்ள உயர் திறன் மையத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் எம்.எஸ்.தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் சிறிய அளவில் பயிற்சி முகாமை நடத்தியிருந்தது. 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள மிராஜ் சர்வதேச மைதானத்தில் இரு பயிற்சி அமர்வுகளை நடத்தி உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த பிப்ரவரி மாதம் அபுதாபியில் சிறப்பு பயிற்சி முகாமை நடத்தியது. தொடர்ந்து தற்போது அந்த அணி தரம்சாலாவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த மார்ச் 1-ம் தேதி உள்ளூர் வீரர்களை கொண்டு பயிற்சி முகாமை நடத்தியது.
ஐந்து முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும் வரவிருக்கும் சீசனுக்கான தங்களின் பயிற்சியை தொடங்கியுள்ளது. 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் 15-ம் தேதி முதல் ஜெய்ப்பூரில் பயிற்சியை தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வரும் 18-ம் தேதி பயிற்சியை தொடங்குகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி ஹைதராபாத்தில் பயிற்சி முகாமை நடத்தியது. அந்த அணி டெல்லியிலும் பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது லக்னோ நகரில் பயிற்சி அமர்வை நடத்தியுள்ளது.