ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.
அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காத நிலையில் முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷார்ட் தேர்டு மேன் திசையில் நின்ற மணிமாறன் சித்தார்த்தின் அபாரமான கேட்ச் காரணமாக வெளியேறினார். ஷமி தனது அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட்டை (7) ஆட்டமிழக்கச் செய்தார். இதன் பின்னர் பிரின்ஸ் யாதவ் பந்தில் இஷான் கிஷன் (1) போல்டானார்.பவர்பிளேவில் ஹைதராபாத் அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 14 ரன்கள் எடுத்த நிலையில் திக்வேஷ் ராதி பந்தில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 7.1 ஓவர்களில் ஹைதராபாத் அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. இதன் பின்னர் ஹெய்ன்ரிச் கிளாசனுடன் இணைந்த நித்திஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடினார்.
நித்திஷ் குமார் ரெட்டி 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், ஹெய்ன்ரிச் கிளாசன் 41 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 63 பந்துகளில் 116 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஹர்ஷ் துபே 0, ஷிவாங்க் குமார் 5, ஹர்ஷால் படேல் 4 ரன்களில் நடையை கட்டினர். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
லக்னோ அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். 157 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரிஷப் பந்த் 50 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், முகுல் சவுத்ரி 2 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக தொடக்க வீரர்களான எய்டன் மார்க்ரம் 27 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆயுஷ் பதோனி 12, நிகோலஸ் பூரன் 1, அப்துல் சமத் 16 ரன்களில் வெளியேறினர். ஜெயதேவ் உனத்கட் வீசிய கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் 2 பந்துகளையும் ரிஷப் பந்த் பவுண்டரிக்கு விரட்டினார்.
அடுத்த 2 பந்துகளிலும் ரன்கள் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து 5-வது பந்தை ரிஷப் பந்த் பவுண்டரிக்கு விரட்ட லக்னோ அணி வெற்றியை வசப்படுத்தியது. 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்திருந்தது.