விளையாட்டு

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி!

வேட்டையன்

லண்டன்: கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் என கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 270 ரன்களில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி.

கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி சார்பில் ஸ்மிருதி, கேப்டன் ஹர்மன்ப்ரீத், தீப்தி சர்மா ஆகியோர் அரை சதம் விளாசினர். முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்தது இந்தியா.

தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பந்து வீசிய கிரந்தி கவுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 115 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. அதில் 86.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி 70 மற்றும் ரிச்சா கோஷ் 50 ரன்கள் எடுத்தனர். 456 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது.

அந்த அணி சார்பில் ஏமி ஜோன்ஸ் 54, சோபி 50 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 62.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. அதன் மூலம் இந்தியா 270 ரன்களில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை நான்காவது முறையாக இந்தியா வீழ்த்தி உள்ளது. இதில் மூன்று வெற்றி இங்கிலாந்து மண்ணில் பதிவாகி உள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பில் பந்து வீசிய ஸ்னே ராணா 4 விக்கெட் கைப்பற்றினார். சாயாலி, கிரந்தி, தீப்தி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை கிரந்தி கவுட் வென்றார்.

SCROLL FOR NEXT