புதுடெல்லி: இந்திய தடகள வீரர் ஜின்சன் ஜான்சன் தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இந்தியாவின் நட்சத்திர தடகள வீரராக அறியப்படுபவர் 34 வயதான ஜின்சன் ஜான்சன். இவர் 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் இந்தியா சார்பில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.
இது தவிர கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1,500 மீட்டர் பிரிவில் பங்கேற்ற அவர் தங்கப் பதக்கத்தையும், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இந்நிலையில் தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜின்சன் ஜான்சன் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “15 ஆண்டுகளாக தடகளப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன். கொல்கத்தாவில் முதன்முதலில் போட்டியில் பங்கேற்றபோது சிறுவனாக இருந்தேன். ஹாங்சோவில் 2023-ல் பதக்கம் வென்றபோது மகிழ்ச்சியாக இருந்தது.
சில பயணங்கள் மீட்டர்களிலும் வினாடிகளிலும் அளவிடப்படுகின்றன. சில பயணங்கள் கண்ணீர், தியாகங்கள், நம்பிக்கை மற்றும் உங்களை ஒரு போதும் கீழே விழ விடாத மனிதர்களால் அளவிடப்படுகின்றன. தற்போது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என்றார்.