பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய மகளிர் அணி 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 27 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.
எலிஸ் பெர்ரி 43, அனாபெல் சுதர்லேண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 90.4 ஓவர்களில் 323 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அனாபெல் சுதர்லேண்ட் 171 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் விளாசினார்.
இந்திய மகளிர் அணி தரப்பில் சாயாலி சத்கரே 4 விக்கெட்களை வீழ்த்தினார். கிரந்தி கவுடு, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய மகளிர் அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 29 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது.
ஸ்மிருதி மந்தனா 2, ஷபாலி வர்மா 5, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11, தீப்தி சர்மா 9, ரிச்சா கோஷ் 0 ரன்களில் நடையை கட்டினர். பிரதிகா ராவல் 43, ஸ்நே ராணா 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 20 ரன்கள் பின்தங்கி உள்ள இந்திய மகளிர் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.