துபாய்: ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 101 ரன்களை குவித்து இருந்தது. இதனால் 200 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த ஆட்டத்தில் கடைசி 7 விக்கெட்களை 29 ரன்களுக்கு கொத்தாக தாரைவார்த்து இருந்தது இந்திய அணி. இதனால் இந்த விஷயத்தில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். ஹாங்காங் அணி தனது முதல் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் 121 ரன்கள் இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்திருந்தது.