குவாஹாட்டி: இந்தியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் செனுரன் முத்துசாமி, மார்கோ யான்சன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் அசாமின் குவாஹாட்டியில் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தை, செனுரன் முத்துசாமி 25 ரன்களுடனும், கைல் வெர்ரைன் ஒரு ரன்னுடனும் தொடங்கினர்.
இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். 122 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்தபோது கைல் வெர்ரைன், ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ரிஷப் பந்த்தின் ஸ்டம்பிங்கால் அவுட்டானார். 7-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 88 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த செனுரன் முத்துசாமியும், மார்கோ யான்சனும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் ஸ்கோர் 400 ரன்களைக் கடந்தது. அபாரமாக விளையாடிய செனுரன் முத்துசாமி சதமடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் விளாசும் முதல் சதமாகும் இது. 206 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் குவித்து, சிராஜ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் அவர். மறுமுனையில் தனது விளாசலைத் தொடர்ந்த யான்சன், அரை சதத்தைக் கடந்து சதத்தை நெருங்கினார். இதனிடையே சைமன் ஹார்மரை, பும்ரா போல்டாக்கினார் அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேசவ் மஹாராஜும், யான்சனும் நிதானமாக விளையாடினர். ஆனால், குல்தீப் யாதவ் தனது அபாரமான சுழல்பந்தால் யான்சனை வெளியேற்றினார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாச முடியாமல் அவர் ஆட்டமிழந்தார். அவர் 91 பந்துகளில் 6 பவுண்டரிகள்,7 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
151.1 ஓவர்களில் 489 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 6.1 ஓவர்களில் இந்திய அணி 9 ரன்கள் எடுத்திருந்தபோது வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. 480 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட உள்ளது. ஜெய்ஸ்வால் 7, கே.எல்.ராகுல் 2 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
7-வது வீரராக களமிறங்கி சதம்: இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்த தென் ஆப்பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமிக்கு இது முதல் சதமாகும். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 7-வது வீரராக களமிறங்கி சதமடித்த 3-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை முத்துசாமி பெற்றுள்ளார். இதற்கு முன்பு குயிண்டன் டி காக் (111 ரன்கள், விசாகப்பட்டினம், 2019), லான்ஸ் குளூஸ்னர்(102, கேப் டவுன், 1997) ஆகியோர் 7-வது வீரராக இந்தியாவுக்கு எதிராக களமிறங்கி சதமடித்துள்ளனர்.
யார் இந்த செனுரன் முத்துசாமி? - இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் முத்துசாமி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் தான் இவரது தந்தை முத்துசாமியின் சொந்த ஊராகும். இந்திய வம்சாவளி வீரர் என்பதால் செனுரன் முத்து சாமியை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
செனுரன் முத்துசாமி, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 2019-ல் அறிமுகமானார். தென்ஆப்பிரிக்காவில் 1994-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி செனுரன் முத்துசாமி பிறந்தார். தென் ஆப்பிரிக்காவில் வசித்தாலும் தமிழக கலாசாரத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறார் செனுரன் முத்துசாமி. சமூக அறிவியலில் பட்டப்படிப்பை முடித்த இவர், பள்ளியிலேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். 11, 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் சிறப்பாக பரிமளித்த இவர், தேசிய அணிக்கு தேர்வாகி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.