வைபவ் சூர்யவன்ஷி
புலவாயோ: ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா யு-19 அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதே பிரிவில் அமெரிக்கா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 5 முறை சாம்பியனான இந்தியா யு-19 அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று (15-ம் தேதி) அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 1 மணிக்கு ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெறுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் நுழைவதற்கு யு-19 உலகக் கோப்பை தொடர் முதற்படியாக அமைந்துள்ளதால் இளம் வீரர்களுக்கு இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இளம் இந்திய அணி ஆயுஷ் மாத்ரே தலைமையில் களமிறங்குகிறது. 2000, 2008, 2012, 2022, 2018-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி 6-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு இருந்தது. எனினும் இம்முறை இளம் இந்திய அணி சிறந்த பார்மில் உள்ளது. இந்திய யு-19 அணி கடைசியாக விளையாடிய 16 ஆட்டங்களில் 13-ல் வெற்றி கண்டுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக பெற்ற வெற்றிகளும் இதில் அடங்கும்.
பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, விஹான் மல்கோத்ரா, ஆரோன் ஜார்ஜ், அபிக்யான் குண்டு ஆகியோர் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். பந்துவீச்சில் தீபேஷ் தேவேந்திரன், ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், கிஷான் சிங், ஹனில் படேல் ஆகியோர் அமெரிக்க பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அமெரிக்க அணி உத்கர்ஷ் வஸ்தவா தலைமையில் களமிறங்குகிறது.