விளையாட்டு

“எப்போதும் ஒரே பாணியில் விளையாட முடியாது” - வைபவ் சூர்யவன்ஷி கருத்து

‘சூழ்​நிலைக்கு தகுந்​த​படி விளையாட கற்றுக்கொண்டுள்ளேன்’

செய்திப்பிரிவு

அகம​தா​பாத்: அழுத்​த​மான சூழ்​நிலைகளில் எப்​படி விளை​யாட வேண்​டும் என்​ப​தை​யும், சூழ்​நிலைக்​குத் தகுந்​த​படி ஆட்​டத்தை எப்​படி மாற்​றியமைக்க வேண்​டும் என்​ப​தை​யும் கற்றுக்கொண்டுள்​ள​தாக ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் இளம் பேட்​ஸ்​மே​னான வைபவ் சூர்யவன்ஷி தெரி​வித்​துள்​ளார்.

19-வது ஐபிஎல் கிரிக்​கெட் திரு​விழா நேற்று முன்​தினம் கோலாகலமாக நிறைவடைந்​தது. இறு​திப் போட்​டி​யில் ரஜத் பட்டிதார் தலைமையி​லான ஆர்​சிபி அணி, குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்​பின் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​தத் தொடரில் அனை​வரது கவனத்​தை​யும் தனது அதிரடி பேட்டிங்கால் ஈர்த்த 15 வயதாகும் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இறு​திப் போட்டி பரிசளிப்பு விழா​வில் விருதுகளை அள்​ளி​னார்.

இந்த சீசனின் வளர்ந்து வரும் வீரர், சூப்​பர் ஸ்டிரைக்​கர், சூப்​பர் சிக்​ஸர்ஸ் ஆஃப் தி சீசன், அதிக மதிப்​புமிக்க வீரர், தொடர் நாயகன் உள்​ளிட்ட விருதுகளை சூர்​ய​வன்ஷி வென்​றார். அதிக ரன்​கள் குவித்த வீரர்​களுக்கு வழங்​கப்​படும் ஆரஞ்சு தொப்பியையும் கைப்​பற்​றி​னார் சூர்​ய​வன்​ஷி. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர், 16 ஆட்​டங்​களில் விளை​யாடி 237.3 ஸ்டிரைக் ரேட்டுடன் 776 ரன்​களை குவித்​திருந்​தார். இதில் ஒரு சதம், 5 அரை சதங்​கள் அடங்​கும். சூர்​ய​வன்ஷி நடப்பு ஐபிஎல் தொடரில் 72 சிக்ஸர்​களைப் பறக்​க​விட்​டு, ஒரு சீசனில் அதிக சிக்​ஸர்​கள் அடித்திருந்த கிறிஸ் கெயி​லின் (59 சிக்​ஸர்​கள்) சாதனையை முறியடித்து புதிய சாதனையை​யும் படைத்​திருந்​தார்.

இறு​திப் போட்​டி​யின் பரிசளிப்பு விழா​வில் பல்​வேறு விருதுகளை பெற்​றுக் கொண்ட வைபவ் சூர்​ய​வன்ஷி கூறிய​தாவது: இந்த ஐபிஎல் சீசனில் அழுத்​த​மான போட்​டிகளில் எப்​படி விளை​யாட வேண்​டும் என்​ப​தை​யும், சூழ்​நிலைக்கு ஏற்ப ஆட்​டத்தை எப்​படி மாற்​றியமைக்க வேண்​டும் என்​ப​தை​யும் நான் கற்றுக்கொண்டேன். எல்லா போட்​டிகளி​லும் ஒரே மாதிரி​யான பாணி​யில் விளை​யாட முடி​யாது. போட்​டி​யின் சூழ்​நிலையை புரிந்து கொண்​டு, அணி​யின் தேவைக்கு ஏற்ப விளை​யாட வேண்டும். பிளே-ஆஃப் போட்​டிகளின் போதும் நான் இதை நிறைய கற்​றுக்​கொண்​டேன்.

நான் எப்​போதும் எனது இயல்​பான ஆட்​டத்தை நம்​பியே விளையாட முயற்சி செய்​கிறேன். ஒரு பந்தை என்​னால் சிக்​ஸரோ அல்​லது பவுண்​டரியோ அடிக்க முடி​யும் என்று எனக்​குத் தோன்றினால், நான் எதைப் பற்​றி​யும் யோசிக்​காமல் முழு பலத்தை​யும் பிரயோகித்து அப்​படியே விளை​யாட முயற்சி செய்கிறேன். நான் நீண்ட காலத்​துக்கு கிரிக்​கெட் விளை​யாட விரும்​பு​கிறேன், அதற்​காக எனது உடற்​தகு​தி​யில் கவனம் செலுத்த வேண்​டும். அதற்​காக உழைக்​க​வும் வேண்​டும்.

ராஜஸ்​தான் அணி​யில் உள்ள அனை​வரும் எனக்கு ஆதர​வாக இருக்​கிறார்​கள். என்னை முழு​மை​யாக நம்பி ஊக்குவிக்கிறார்கள். மூத்த வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள், உதவி பணி​யாளர்​கள் என அனை​வரும் எனக்கு மிகப்​பெரிய அளவில் பக்​கபல​மாக இருக்​கிறார்​கள். அங்​குள்ள அனை​வருமே அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்​கள் என்​ப​தா​லும், அவர்​கள் மிக உயர்​தர​மான கிரிக்​கெட்டை விளை​யாடு​வ​தா​லும், என்​னால் அங்​கிருந்து நிறைய கற்​றுக்​கொள்​ள முடிகிறது. இவ்​வாறு வைபவ் சூர்யவன்ஷி கூறினார்.

SCROLL FOR NEXT