கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை விரட்டிய நடப்பு சாம்பியனான இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் 1-ல் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி. தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 40 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97* ரன்கள் விளாசி அணியின் வெற்றில் முக்கிய பங்குவகித்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், திலக் வர்மா 27 ரன்களும் சேர்த்தனர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெரிய அளவில் தோல்வியை சந்தித்த பின்னரே டாப் ஆர்டர் பேட்டிங்கை மாற்றி அமைக்கும் வகையில் 31 வயதான சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சஞ்சு சாம்சன் கூறியதாவது: ஷாட்களை தேர்வு செய்து விளையாடுவதில் கவனம் செலுத்தியிருந்தேன். எனது பேட்டிங்கில் அதிக அளவில் மாற்றம் செய்ய நான் விரும்பவில்லை. ஏனெனில் இதே பாணியில் விளையாடிதான் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தேன் என்பதை நான் அறிவேன்.
அதனால் நான் என்னையே நம்பினேன். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்தேன், சமூக வலைதளங்கள் பக்கம் செல்லவில்லை. எனது சொந்த கருத்துகளை நானே கேட்டேன். சிறப்பு வாய்ந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது.
சேஸிங் சற்று கடினமாக இருந்தது. நமது பேட்டிங் பலம் மற்றும் பனிப்பொழிவால் ஈடன் கார்டன் மைதானத்தில் 190-க்கும் மேலான இலக்கை துரத்துவது கொஞ்சம் எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் அது சவாலாக மாறியது.
உண்மையைச் சொல்லப் போனால், என்னுடைய அனுபவம் பெரிய அளவில் பங்காற்றியது. எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது, ஆனால் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தபோது, ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் வகையில் கடைசி தருணம் வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று உணர்ந்தேன்.
பொதுவாக வீரர்கள் இதைச் செய்ய விரும்புவார்கள். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்காது, எனவே இந்த ஆட்டத்தில் அது நடந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அழுத்தமான ஆட்டத்தில் இதுபோன்ற ஒரு ஸ்கோரைத் துரத்தும்போது, ரிஸ்க் எடுத்து விளையாடும் ஷாட்களை தேர்வு செய்வதற்கு பதிலாக அதிக பவுண்டரிகளை விரட்ட வேண்டும்.
நம்முடைய மனித இயல்பு என்னவென்றால், நாம் பல நேரங்களில் ‘நான் இதை செய்ய முடியுமா? முடியாது போலிருக்கிறதே’ என்பது போன்ற எதிர்மறை எண்ணத்திலிருந்து தொடங்குவோம். எனக்கும் இந்த எண்ணங்கள் இருந்தன. ஆனால் இவற்றை நேர்மறையாக மாற்ற நான் முயற்சி செய்தேன்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அங்கம் வகிக்க விரும்பினேன். ஆனால் அது நடைபெறவில்லை. எனினும் அதிர்ஷ்டவசமாக 10 நாட்கள் இடைவெளி கிடைத்தது.
எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அணியிலும் இடம்பெறவில்லை. இன்னும் என்ன இருக்கிறது? ஏன் இது வேலை செய்யவில்லை? இன்னும் என்ன செய்ய வேண்டும்?’ என ஆத்மார்த்தமாக சிந்தித்தேன். அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினேன். என்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் மேம்படுத்திக் கொண்டு, மீண்டும் திரும்பி வந்தேன். பலரிடமிருந்து ஆலோசனைகள் வந்தன.
அதில் சரியான கருத்துகளும் இருந்தன. ஆனால் அதே சமயம், ‘சஞ்சு, நீ இதே முறையில் விளையாடிதான் மூன்று சர்வதேச சதங்கள் அடித்திருக்கிறாய்’ என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது.
இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற ஒரு நாளைப் பற்றி கனவு காண்கிறார்கள். நானும் கனவு காணத் துணிந்தேன். கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனாக நாட்டுக்காக முக்கியமான போட்டியில் வெல்வது பற்றி கனவு கண்டேன். அது தற்போது நிகழ்ந்துள்ளது. இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.